தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு இனி ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண்
அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் பதிவு வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண் விவரங்கள் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மைய (எமிஸ்) விவரங்களுடன் இணைக்க வேண்டும். மாணவர்களுக்கான ஆதார் பதிவுப் பணிகளைச் மேற்கொள்ளும் வகையில் கணினி விவரப் பதிவாளர்கள் பணியில் இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற வட்டார வள மையத்துக்கு ஒன்று வீதம் ஆதார் பதிவுக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு ஆதார் பதிவு மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆதார் இணையதளத்தில் பதிவேற்றம்
வட்டார வள மைய கணினி விவரப் பதிவாளர்களும் ஆதார் பதிவு செய்யும் கருவியை இயக்கி, சம்பந்தப்பட்ட மாணவர்களிடம், மாணவர்களின் பெற்றோர்களிடம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆதார் எண் விவரங்களைச் சேகரித்து, விவரங்களை ஆதார் கருவி மூலம் பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்யப்பட்ட விவரங்களை குறிப்பிட்ட காலவரைக்குள் ஆதார் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கட்டணம் இல்லை
ஆதார் எண் தொடர்பான விவரங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தால், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரைப்படியே செய்ய வேண்டும். ஆதார் எண் பதிவு செய்த பின்பு தொடர்புடைய மாணவர்களுக்குப் பதிவு செய்ததற்கான ரசீது வழங்க வேண்டும். மேலும், ஆதார் பதிவு, பள்ளி வேலை நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும். இதில், புதிய ஆதார் எண் பதிவுக்கு மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் பெறக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 கட்டணம்
மேலும், மாணவர்களின் ஆதார் எண் பதிவில் மாணவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தால், மாற்றம் செய்தற்கான கட்டணமாக ரூ.50 வசூலிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு மட்டுமே
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இச்சேவை பொருந்தும். பொதுமக்களுக்கு இம்மையங்களில் சேவை அளிக்கக்கூடாது.


Click it and Unblock the Notifications












