சென்னை : பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளிலும் அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) கீழ் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு வகையான கல்வி உதவித் தொகையை பெற்று வருகின்றனர். தற்போது, அதற்கான பதிவு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளின்படி, கல்வி உதவித் தொகையைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்
ஆதார் எண் பெறாதவர்கள் ஜுன் மாத இறுதிக்குள், தங்களது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்த புதிய விதிமுறை அசாம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்குப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை பதிவு செய்யப்படாத மாணவர்களுக்காக 2017 மே மாதம் வட்ட அளவில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
உரிய நடவடிக்கை
இது சார்பாக தாலுகா அளவில் நடைபெறும் சிறப்பு முகாமில் அந்தந்த தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள்,தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்த விபரத்தை தெரிவித்து ஆதார் அட்டை பதிவு முகாமை பயன்படுத்திக்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும்.
100 சதவீத ஆதார்
100 சதவீத ஆதார் பதிவை உறுதி செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அனைத்து மாணவர்களும் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்தி ஆதார் பெற்றுக் கொள்ளலாம்.
போலிச்சான்றிதழ்
போலிச் சான்றிதழ்களை தடுப்பதற்காக பட்டப் படிப்பு சான்றிதழ்களிலும், மதிப்பெண் சான்றிதழ்களிலும் மாணவர்களின் புகைப்படத்தையும், ஆதார் எண்ணையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என, நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., கடந்த மாதம் உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.