கேரள அரசின் அக்ஷரலக்ஷம் திட்டத்தின் கீழ் 96 வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதிய கார்த்தியாயினி அம்மா 98 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்துவந்த நிலையில் தற்போது காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் கல்விச் செயல்பாடுகளுக்கான நல்லெண்ணத் தூதுவர் விருதையும் பெற்றுள்ளார்.
நாட்டிலேயே அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலமாக அறியப்படுவது கேரளா. கேரள மாநிலத்தில் 90 சதவிகித மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். ஒரு மாநிலம் 90 சதவிகிதத்திற்கும் மேல் கல்வி அறிவு பெற்றுவிட்டால், யுனெஸ்கோ அப்பகுதியை முழுமையான கல்வி பெற்ற மாநிலமாக அறிவிப்பது வழக்கம்.
இந்நிலையில், கேரள மாநில அரசு, மாநிலத்தின் கல்வி நிலையினை மேலும் உயர்த்த அக்ஷரலக்ஷம் என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் வாசிப்பு, எழுத்து மற்றும் அடிப்படைக் கணிதம் ஆகியவற்றுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில் கடந்த ஆண்டு ஏறத்தாழ 43,933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர் தான் 97 வயதாகும் ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மா என்னும் மூதாட்டி மாணவி. இவர், நூற்றுக்கு 98 மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற்றார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.
இதனிடையே, கார்த்தியாயினி அம்மா-வை நேரில் சந்தித்த காமன்வெல்த் அமைப்பின் கல்விச் செயல்பாடுகள் பிரிவின் துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், காமன்வெல்த் நல்லெண்ணத் தூதருக்கான விருதை வழங்கியுள்ளார்.