சென்னை ஐ.ஐ.டி.,யில் அரசு பள்ளி மாணவர்கள்
சென்னை ஐ.ஐ.டி., பி.எஸ்., டேட்டா சயின்ஸ் படிப்பை, ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த படிப்பில் சேர, ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை.
10-ம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் தேர்ச்சிப்பெற்றவர்கள், 12-ம் வகுப்பை முடித்தவர்கள், கல்லூரிகளில் ஏதேனும் இளநிலைப் படிப்பைத் தொடர்பவர்கள், ஏதேனும் பணிகளில் வேலை செய்பவர்கள் என, அனைவரும் இந்தப் படிப்பில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்
.இதைத்தொடர்ந்து "அனைவருக்கும் ஐ.ஐ.டி.,எம்" என்ற பெயரில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 58 அரசு, மாநகராட்சி பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 192 மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி.,யில் 14 வாரங்கள் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் பி.எஸ்., பட்டப்படிப்பில் சேர்வதற்கான தகுதி தேர்வை எழுதினர்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 87 மாணவ-மாணவிகளுக்கு, சென்னை ஐ.ஐ.டி.,யில் பி.எஸ்., டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்துள்ளது.
இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு 75 சதவிகிதம் கல்வி உதவித்தொகையை சென்னை ஐஐடி வழங்குகிறது.
இந்தநிலையில், ஐஐடி-யில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்துள்ளவர்களில் 45 பேருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நவ.5., ஆணைகளை வழங்கினார்.
பின் அவர் பேசியதாவது, "இதுபோன்ற திட்டங்கள் எங்களுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்று மேலும் பல திட்டங்கள் கொண்டு வருவதற்கு இது உதவியாக இருக்கும். அரசு பள்ளி மாணவர்களை அடுத்த கட்டடத்திற்கு கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்.
அதில் எங்களுக்கு உதவியாக சென்னை ஐஐடி இணைந்ததற்கு நன்றி. இதுபோன்ற மேலும் அறிவிப்புகள் உங்களிடமிருந்து வரும்போது அதற்கும் நாங்கள் தயாராக இருப்போம்" என்றார்.
ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், "87 மாணவர்கள் என்பது வெறும் 33 சதவிகிதம்தான். வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும். நான் இயக்குநராக பொறுப்பேற்றதற்கு எனக்கு கிடைத்த ஒரு சிறந்த பரிசு இது.
இது சாதாரண படிப்பு கிடையாது. இதில் பயிற்சி எடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் மேலும் வெற்றி அடைவார்கள். இன்னும் 10 வருடத்தில் டேட்டா சயின்ஸில் அதிக வேலை வாய்ப்பு ஏற்படும்.
தற்போது பிஎஸ் படிப்பிற்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் உங்களுக்கு பின்னால் வரும் மாணவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அவர்களையும் இதுபோன்ற படிப்புகளை மேற்கொள்ள ஊக்குவியுங்கள்.
வணிக ரீதியாக வலிமையான முடிவுகளை மேற்கொள்ள உதவும் வகையில், தரவுகளை நிர்வகிக்கவும், வடிவங்களைக் காட்சிப்படுத்தவும், பயனுள்ள வணிக முடிவுகளை எடுக்கவும் தரவு அறிவியல் (Data Science) பாடத்திட்டம் உதவிகரமாக உள்ளது.
விரிவான பயிற்சி, அனுபவக் கற்றல் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் தொழில் ரீதியாக தரத்தை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் பயிற்சி பெறுகின்றனர்" என்றார்.
ஐ.ஐ.டி., மெட்ராஸ்-ன் பிஎஸ் திட்ட ஆசிரியர் மற்றும் பொறுப்பாளரான பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் கூறியதாவது
"தரவுகளை அடிப்படையாகக் கொண்ட உலகில் திறனையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கக் கூடிய தளமாக இந்த பாடத்திட்டம் விளங்குகிறது. அனைத்தையும் உள்ளடக்கிய, குறைந்த செலவிலான இந்தக் கல்வி மாதிரியின் மூலம் கல்வி பயில்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உயர்தரமான கல்வியைப் பெற முடியும் என ஐஐடி குழுவினர் உறுதியாக உள்ளனர்" என்றார்.
ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் திட்டத்தின் அடுத்த பேட்ச் ஜனவரி 2023ல் தொடங்குவதால், விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications












