சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் இடமாற்றக் கவுன்சிலிங் மூலம் 865 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு, இடமாறுதல் கவுன்சிலிங் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் நடைபெற்று வரும் இந்த கவுன்சிலிங் மூலம் ஆசிரியர்களுக்கு தேவையான இடங்களில் டிரான்ஸ்பர் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 865 பேர் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.