சென்னை : புழல் சிறையை தேர்வு மையமாக வைத்து திமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகள் 95 பேர் பிளஸ்2 தேர்வு எழுதினர். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் புழல் சிறையில் தேர்வு எழுதிய 95 பேரில் 83 கைதிகள் தேர்ச்சி பெற்றனர்.
அதில் 8 பேர் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்து உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை படிப்பதற்கு வயது வரம்பு, இடம் சூழல் எதுவும் தடையாக இருப்பதில்லை. ஜெயிலில் இருந்த கைதிகளும் பிளஸ்2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
படிப்பதற்கு ஆர்வமும் விருப்பமும் இருந்தால் போதும் எந்த இடத்தில் இருந்தாலும் படிக்கலாம் என்பதற்கு ஜெயில் இருந்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற இவர்கள் எடுத்துக்காட்டாவார்கள்.
முதல் மூன்று இடம்
புழல் சிறையில் உள்ள கைதி முத்துச் செல்வன் (வயது 24) 1064 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பெற்றார். பாளையங்கோட்டை சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி முத்துராமலிங்கம் 1057 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். திருச்சி சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி செந்தில்குமார் 1052 மதிப்பெண்களைப் பெற்று 3ம் இடத்தைப் பெற்றுள்ளார்.
சாதனையாளர்கள்
திருச்சி சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சுவாமிநாதன் 1038, யோகநாதன் 1022, டேனியல் 1019, கோவை சிறை கைதி வேல்முருகன் 1006 புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி ஜெயகர்உசேன் 1034 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
ஆயுள் தண்டனை கைதி
முதல் இடம் பெற்று புழல் சிறை கைதி முத்துச் செல்வன் கடந்த 2011ம் ஆண்டு சென்னை நெற்குன்றத்தில் நான்கு அரை பவுன் நகைக்காக ஜெயலட்சுமி என்ற பெண்ணை கொலை செய்து குளிர் சாதனை பெட்டிக்குள் அடைத்து வைத்தவர். இந்த வழக்கில் அவருக்கு 2013ம் ஆண்டில் திருவள்ளூர் கோர்ட்டு தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் அவர் தொடர்ந்த மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கைதிகளுக்கு பாராட்டு
பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி அடைந்த கைதிகளை சிறை அதிகாரிகள் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு பாடம் பயிற்றுவித்த ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.