சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர இரண்டாம் கட்டக் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கின் முதல் நாளில் மட்டும் 80 பேருக்கு அட்மிஷன் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி தேர்வுக் குழு
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட கவுன்சிலிங்
முதல் கட்ட கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் உயர் சிறப்பு அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள மையத்தில் ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது.
2,900 பேர் சேர்க்கை
அப்போது சுமார் 2,900 பேருக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் காலியாகவுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2-ம் கட்ட கவுன்சிலிங் நேற்று தொடங்கியது.
ஜூன் 25 வரை....
இந்த கவுன்சிலிங் தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி வரை மருத்துவமனை வளாகத்திலேயே நடைபெறவுள்ளது. முதல் நாளில் மட்டும் 80 பேருக்கு அட்மிஷன் கடிதங்கள் வழங்கப்பட்டன.
80 பேருக்கு...
முதல் நாளில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 4 மாணவர்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர 52 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
பல் மருத்துவச் சேர்க்கை...
மேலும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேர 15 மாணவர்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர 9 மாணவர்கள் என மொத்தம் 80 பேருக்கு சேர்க்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இத்தகவலை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.
காலியிடங்கள் எவ்வளவு?
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 57 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 10 பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 903 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்ப தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இது ஜூலை 25-ம் தேதி வரை நடைபெறும் என்றார் டாக்டர் உஷா சதாசிவம்.