சென்னை: எம்பிபிஎஸ் சீட் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் இந்தக் காலத்தில் கிடைத்த சீட்டையும் திரும்ப ஒப்படைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாததன் காரணமாக கிடைத்த எம்பிபிஎஸ் சீட்களை திரும்ப ஒப்படைத்துள்ளனர் 7 மாணவ, மாணவிகள்.
கடந்த மாதம் 19-ம் தேதி எம்பிபிஎஸ் முதல் கட்ட கவுன்சிலிங் தொடங்கி 25-ம் தேதி நிறைவு பெற்றது. இதில் சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவ, மாணவிகள் 7 பேர், பி.இ. பொதுப்பிரிவு கவுன்சிலிங்கின்போது எம்பிபிஎஸ் சீட்டுகளை ஒப்படைத்துவிட்டனர்.
பின்னர் அவர்கள் பி.இ. படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்று எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களைத் தேர்வு செய்யபவர்களில் சிலர், பொருளாதார வசதி குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த இடங்களை ஒப்படைத்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று பி.இ. இடங்களைத் தேர்வு செய்து வருவது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வருகிறது.
அது இந்த ஆண்டும் நடந்துள்ளது.
கடந்த 2014-15 கல்வியாண்டில் 26-க்கும் அதிகமான மாணவர்களின் தங்களின் எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு, பொறியியல் படிப்புகளில் சேர்ந்தனர். இதுபோல, இந்த முறையும் மாணவர்கள் தங்களுடைய எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைக்கத் தொடங்கியுள்ளனர்.
2015-16 கல்வியாண்டுக்கான பொறியியல் பொதுப் பிரிவு கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 7 மாணவ, மாணவிகள் தங்களுடைய எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு பி.இ. இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதங்களை பெற்றுச் சென்றனர்.
இவ்வாறு எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.