சென்னை: வேலூரிலுள்ள புகழ்பெர்ற விஐடி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் "கிராவிடாஸ் 2015' என்று அழைக்கப்படும் சர்வதேச அறிவுசார் விழா நாளை தொடங்கி 3 நாள் நடைபெறவுள்ளது. இதில் சுமார் 27 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர். விழாவின்போது 7 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் கூறியதாவது:
தொழில்நுட்பம், மேலாண்மை, தொழில்முனைதல் ஆகியவற்றில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குதல், வடிவமைத்தல், காப்புரிமை பெறுதல் ஆகியவற்றை மையக் கருத்தாகக் கொண்டு இந்த ஆண்டின் சர்வதேச அறிவுசார் விழாவை விஐடி நடத்தவுள்ளது.
இதில், என்ஐடி, ஐஐஎம் உள்ளிட்ட 600 பல்கலைக்கழகங்கள், 1031 கல்லூரிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், விஐடியில் பயிலும் 19 ஆயிரம் மாணவ, மாணவிகளும் பங்கேற்கின்றனர்.
மின்னியல், பயோ-என்ஜினீயரிங், ரொபோடிக்ஸ், மெக்கானிக்கல், சிவில், மேலாண்மை ஆகியவற்றில் 126 நிகழ்ச்சிகள் இடம்பெறும். இவற்றில் 76 நிகழ்ச்சிகள் தொழில்நுட்பம் சார்ந்தவையாகவும், 36 நிகழ்ச்சிகள் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், பணிமனைகளாகவும் இடம்பெறுகின்றன.
முக்கிய அம்சமாக, புதிய கண்டுபிடிப்புக்காக தொழில்நுட்ப ஆராய்ச்சியில் சாதனை படைத்த 7 மாணவர்கள் காப்புரிமைக்காக தங்களின் ஆராய்ச்சி திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளனர். அதற்கான காப்புரிமை விழாவின்போது வழங்கப்படவுள்ளது. இவர்களில் 4 பேர் விஐடி மாணவர்கள், 3 பேர் ஐஐடி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் 3டி பிரிண்டர்ஸ் எனப்படும் பிரிண்டர், விஐடி குளோபல் ஆப்ஸ், வேலூர் ஆப்ஸ் உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளும் அறிமுகம் செய்யப்படுகின்றன.
விழாவில் திறமையை வெளிப்படுத்துவோருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
தொடக்க விழாவுக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகிக்கிறார். பேங்க் ஆஃப் அகெüண்டன்சி முதுநிலைத் துணைத் தலைவர் ரமேஷ் காஷா தொடக்கி வைக்கிறார் என்றார் அவர்.