புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 60 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாகப் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்குச் சென்று மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அப்போது, மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய ராகுல் காந்தி, ''பெண்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் 50 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக இட ஒதுக்கீடு வழங்குவது அவசியம் என்றார்.
தொடர்ந்து, அவர் பேசுகையில், நீதிமன்றங்கள், ஊடகம், மக்களவை, மாநிலங்களவை, பேரவைகள் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்தி சுயமாக செயல்பட்டால் நம் ஜனநாயகம் வலிமையடையும்.
விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாப்பது தேசிய கடமையாகும். இவற்றின் மலமாகவே இந்தியாவில் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், தற்போது இவற்றிற்கு எதிராக பாஜக ஆட்சி செயல்பட்டு வருகிறது'' என்றார்.
முன்னதாக, கலந்துரையாடலின் போது மாணவிகள் ஒவ்வொருவராகக் கேள்விகள் எழுப்பும் போது ராகுல் காந்தியை சார் என அழைத்தனர். அப்போது, ''என்னை சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல் என்றே அழையுங்கள்'' என்றார். அப்போது அங்கிருந்த மாணவி ஒருவர் ராகுல் காந்தியிடம் ''உங்களை அண்ணா என்று அழைக்கலாமா?'' என்று கேட்க, அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
தொடர்ந்து, நடைபெற்ற கலந்துரையாடலில் மாணவிகள் அனைவரும் ராகுல் காந்தியை அண்ணா என்றே அழைத்து கேள்வி கேட்டனர்.