டெல்லி: நமது நாட்டில் என்ஜீனியரிங் பட்டதாரிகள் பலருக்கும் வேலை கிடைக்காத அவல நிலை நிலவுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 60 சதவீதம் பேருக்கு உரிய வேலை கிடைப்பதில்லையாம்.
நாட்டில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 8 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளியேறுகிறார்கள். இவர்களில் 60 சதவீதம் பேருக்கு வேலை கிடைப்பதில்லையாம்.
அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறதாம்.
20 லட்சம் மனித நாட்கள் இழப்பு:
கிட்டத்தட்ட 20 லட்சம் மனித நாட்கள் இழப்பு ஆண்டுதோறும் ஏற்படுகிறதாம். மேலும் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு கோடை கால பயிற்சி கிடைக்கிறதாம். 3200 நிறுவனங்கள் 15 சதவீத பொறியியல் பட்டதாரிகளை மட்டுமே வேலைக்கு எடுக்கிறதாம்.
படித்தும் தகுதி இல்லை:
பெரும்பாலான பொறியியல் பட்டதாரிகள் வேலைக்குரிய தகுதியுடன் இருப்பதில்லை என்பது இதற்கு முக்கியக் காரணமாகும். இதையடுத்து நாடு முழுவதும் தொழில்நுட்பக் கல்வியை சரி செய்யும் நடவடிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
2018 முதல் நுழைவுத் தேர்வு:
இதன் ஒரு பகுதியாக 2018ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொறியியல் நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இது எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை. மேலும் ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கும் திட்டமும் உள்ளதாம்.
பாடத் திட்டம் மாற வேண்டும்:
இது மட்டுமல்லாமல் ஆண்டு தோறும் பாடத் திட்டங்களை கண்காணித்து அதில் தேவையான மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அப்போதுதான் கல்வி நிறுவனங்களால் தரமான கல்வியை அளிக்க முடியும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












