சென்னை: 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டிலும் 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளில் மாணவிகளை விட மாணவர்கள் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெறுகின்றனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில்ள் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மாணவிகளைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 4.9 சதவீதம் குறைவாக இருந்தது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகளைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 5.9 சதவீதம் குறைவாகவே இருந்தது.
எனவே, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சியை வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பல முறை கூடி ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளனர்.
முதல் கட்டமாக, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் 10-ஆம் வகுப்புக்கு பாடம் நடத்தும் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சியை அளிக்கப் போகின்றனர்.
தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை மாணவர்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. அந்தப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, இரு பாலரும் படிக்கும் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்று அதிகமாக உள்ளது. மகளிர் மட்டும் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது தேர்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டு பயிற்சியின்போது, கடந்த சில ஆண்டுகளில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பொதுத் தேர்வுகளுக்காக தயாரிக்கப்பட்ட சி.டி.க்களின் பிரதிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அதோடு, அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது அனுபவத்தை ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்கும் வெற்றி பார்முலா அவர்களுக்குக் கிடைக்கும் என பள்ளி கல்வித்துறை நம்புகிறது.
கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதில்லை. எனவே, இந்தப் பாடங்களில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்காக ஆசிரியர்களுக்கு தனியான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
மேலும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.