"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு" நீரின் பெருமையை, இவ்வாறு பொய்யாபுலவரான வள்ளூவர் குறிப்பிடுகின்றார்.
அதாவது, 'நீர் இல்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிரினமும், நிலை பெற்று வாழ முடியாது' என்கிறார்.
கி.மு.31ம் ஆண்டில் பிறந்தவர் கூறியவை, தற்போதும் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து வரும் நமக்கு பொருந்தி போகிறது.

ஆம்...! இன்று இணைய இணைப்பு இல்லையெனில், மனிதன் என்ற உயிரினம், அதன் அன்றாட இயக்கத்தை நிறுத்தும் என்ற நிலைக்கு சென்றுள்ளது.
இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் கடந்த இரண்டு தசாப்தங்களில், அபரிமிதமான தொழில்நுட்ப புரட்சியை கண்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
செல்போன், இணைய பயன்பாடு என்பது, யாரும் கண்டிராத வளர்ச்சியை எட்டியுள்ளது. தொழில்நுட்பமும், அது சார்ந்த வளர்ச்சியும், மனிதன் என்ற அஃறிணையை, தன்னகத்து கொண்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால், தற்போது நாம் ஐந்தாம் தலைமுறையை வரவேற்க காத்திருக்கிறோம்.
வரும் ஆண்டுக்குள்(2023), இந்தியாவின் இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 835 மில்லியனாக உயரும் வாய்ப்புள்ளது என, ஆய்வுகள் கூறுகின்றன.
இச்சூழலில், '5 ஜி' என்ற ஐந்தாம் தலைமுறை அலைவரிசையை வரவேற்க, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எதிர்நோக்கி இருக்கிறோம் என்றே கருதலாம்.
அந்தத் தொழில் நுட்பத்திற்கான தேவையை எளிதில் புரிய முனைப்பு காட்டியாக வேண்டும்.
'தொழில்நுட்பம்' என்ற நீரோட்டத்தில், நீந்த தவறிய தலைமுறையையும், பெருந்தொற்று காலம், அந்த நீரோட்டத்தில் நீந்தியே ஆக வேண்டும் என்பதை, உணர்த்தி விட்டு சென்றது.
நாட்டின் 75வது சுதந்திர தின உரையின்போது, பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டில் விரைவில், ' 5 ஜி' அறிமுகப்படுத்தப்படும்; அதன் வேகம்,'4 ஜி' வலையமைப்பை விட(Network), 10 மடங்கு வேகமாக இருக்கும்" என்றார்.
வளர்ச்சியை எது தீர்மானிக்கும்?
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில், இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை, தொலைத்தொடர்பு தீர்மானிக்கும்; இத்தகைய நிலையை எட்ட இதற்கு ஒவ்வொரு மட்டத்திலான தொடர்பை நவீனப்படுத்த வேண்டும்.
ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்ப சேவை வாயிலாக, வேளாண்மை, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் செயல்களின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, வேலைவாய்ப்பும் பன்மடங்கு உருவாகும் என, அத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் ஆளுகை, எளிதாக வாழுதல், வர்த்தகம் புரிதல் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களையும், '5ஜி' தொழில்நுட்பம் கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.
'5ஜி'யை வேகமாக பிரபலப்படுத்த, அரசு மற்றும் தொழில்துறையின் முயற்சிகள் தேவைப்படுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் பிரதானப்படுத்தினார்.
'5 ஜி' புரட்சி?
இரண்டாம் தலைமுறையை கடந்து, மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்திற்குள் நுழைந்த தருணத்தில், உலகம் நமது கைக்குள் அடங்கியதை, பலரும் உணர்ந்தனர்.தற்போது, நொடியில் பாதியை எட்டும் முன்னரே, ஒரு தகவலை நம்மால் அறியும் வண்ணம் நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்தில் பயணித்து கொண்டிருக்கிறோம்.
அதைவிட பன்மடங்கு வேகத்தில், ஒரு தகவலை கிடைக்கப்பெறும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த போகிறோம் என்றால் நம்மால் நம்ப முடிகிறது?
நம்பி தான் ஆக வேண்டும். ஆம்...! அக்டோபர் 12ம் தேதிக்குள் '5ஜி' சேவை தொடங்கப்படும் என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
'5 ஜி' சேவையை விரைவாக அறிமுகப்படும் முயற்சியில் இறங்கிய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துடன், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், தங்களை முடுக்கிவிட்டுள்ளது.
யாருக்கு 'லக்'
• '5 ஜி' சேவைகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.
• முதல் கட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 13 நகரங்களில் மட்டுமே வேகமான 5 ஜி இணைய சேவைகளை பெற முடியும்.
• அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய பெரு நகரங்களில் வசிப்பவர்கள், வேகமான 5ஜி சேவையை பெறுவர்.
• பெரு நகரங்களை தொடர்ந்து, படிப்படியாக, நகரங்கள் மற்றும் கிராமங்களில் 5 ஜி இணைய சேவை விரிவாக்கம் செய்யப்படும்.
• அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், நாட்டின் அனைத்துப் பகுதிகளையும், 5 ஜி சென்றடைய வேண்டும் என்பதே, மத்திய அரசின் எதிர்ப்பார்ப்பு.எல்லாம் சரிங்க, சேவைக்கான கட்டணத்தை குறைவாக வசூலிப்பாங்கனு... நீங்க கேட்பது காதில் விழுந்துடுச்சு...!
எல்லோருக்கும் குறைவான விலையில் இருப்பதை உறுதி செய்வோம். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில், குறைவான விலையில் கிடைப்பதையும், தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்தவுள்ளது.
அடுத்த ஒரு சில ஆண்டுகளில், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், குறைவான விலையில் இந்த 5 ஜி சேவை கிடைக்கப்பெறுவே, இலக்காகும்.

17 ஆயிரம் கோடி
- பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து சுமார் ரூ.17,876 கோடியை, மத்திய தொலைத்தொடர்பு துறை பெற்றுள்ளது.
80 கோடி?
• 2014-ஆம் ஆண்டு 10 கோடியாக இருந்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, தற்போது 80 கோடியாக அதிகரித்துள்ளது.
• நாட்டின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலம் வாயிலாக, ரூ. 1.5 லட்சம் கோடி கிடைக்கப்பெற்றது.
• ஏலத்தில் விடப்பட்ட அலைவரிசையில், கிட்டத்தட்ட பாதியை, அதாவது ரூ. 87,946.93 கோடி அளவுக்கு, ஜியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
• வானொலி அலைகளை ஏலம் எடுத்தவர்கள் முன் பணம் செலுத்திய அதே நாளில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு கடிதங்களை, முதல் முறையாக தொலைத்தொடர்பு வழங்கியுள்ளது.
• ஜூன் 15, அலைக்கற்றையை ஒதுக்குவதற்கான ஏலத்தை நடத்துவது குறித்த தொலைத்தொடர்புத் துறையின் முன்மொழிவுக்கு, மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது.
• இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, 4ஜி, 5ஜி மற்றும் இ-பேண்ட் ஸ்பெக்ட்ரம் தயாரிப்புகள், அதற்குரிய தீர்வுகளை மேம்படுத்துவதற்காக, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் வாயிலாக அரசு உதவுகிறது.
• உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு, 4G, 5G மற்றும் E-பேண்ட் நெட்வொர்க் தயாரிப்புகளை தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு அமைப்பு, நிறுவனங்கள் உள்ளன.
• இதற்காக, டிஜிட்டல் கம்யூனிகேஷன் இன்னோவேஷன் ஸ்கொயர் (DCIS) திட்டத்தின் கீழ், 5ஜி, இ-பேண்ட் தொழில்நுட்பங்களுக்கான நிதியுதவிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
• நாட்டில் டெலிகாம் மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளின் உற்பத்தியை ஊக்குவிக்க, பிப்., 24ல் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்துக்கு, ரூ.12,195 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
• இந்த திட்டம் என்பது உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதை இலக்காக கொண்டது. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ், தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் உள்ளடக்கிய, 4ஜி, 5ஜி தயாரிப்புகள் உற்பத்தியையும் அதிகரிப்பதாகும்.
• மேலும், 5 ஜி க்கு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், நாட்டில் 5 ஜி தயாரிப்புகள் வடிவமைப்பு, உற்பத்தியை எளிதாக்கும் வகையில், திட்ட வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டுள்ளன.
பி.எஸ்.என்.எல்., அதன் நெட்வொர்க்கில் உள்ள வசதிகளை கொண்டு விரிவான ஆய்வு நடத்தியுள்ளது. ஆத்மநிர்பார் திட்டத்தின் முன்முயற்சிக்கு இணங்க, 4ஜி நெட்வொர்க்கிற்கு இருக்கும் அமைப்பை பயன்படுத்துமாறு, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 4 ஜி மொபைல் நெட்வொர்க்கிற்கான பெரும்பாலான அடிப்படை ஆய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இந்தியாவில் இணையம் 1995ல் தொடங்கிய நிலையில், ஐந்தாவது தலைமுறைக்கான 5ஜி சேவையை வழங்க, ஜியோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தயாராகிவருகின்றன.
எது எப்படியோ.... அடுத்த மாதம் வரவிருக்கும் 5 ஜி சேவைக்கான கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கப்படவுள்ளது என்பதை, அந்தந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தான் முடிவு செய்யும். குறைவான விலையில் 5 ஜி சேவை அனைவருக்கும் கிடைக்கும் என, என்னதான் கூவினாலும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன விலை நிர்ணயிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.1 ஜி முதல் 5 ஜி வரை...
1 ஜி சேவை, 1970களில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் தலைமுறை தொழில்நுட்பத்தின் உதவியுடன், குரல் அழைப்பு மட்டுமே செய்ய முடிந்தது.
அதில் ஒலி தரம் மோசமாக இருந்தது, கவரேஜ் பகுதியும் மிக குறைவாகவே இருந்தது. அதோடு ரோமிங் வசதி இல்லை.
2 ஜி
1991ல் 2ஜி வருகைக்குப் பிறகு, இணைய உலகம் வேகம் பெற்றது.
இரண்டாம் தலைமுறையில் அனலாக் சிக்னல்கள், முற்றிலும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டன.
2G மூலம் மக்களுக்கு 'ரோமிங்' வசதி கிடைத்தது. இதுமட்டுமின்றி, சிடிஎம்ஏ, ஜிஎஸ்எம் போன்றவையும், முதன்முறையாக பயன்பாட்டிற்கு வந்தன.
சுமார் 50 கேபிஎஸ் வேகத்தில் எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் அனுப்பும் வசதியும் கிடைத்தது. படிப்படியாக குரல் அழைப்பு மற்றும் இணைய வேகம் இரண்டும் மேம்படத் தொடங்கியது.
3 ஜி
2001ல் 3ஜி இணையம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இணையம் மிகவும் எளிதாகிவிட்டது. 2ஜியை விட 3ஜி நான்கு மடங்கு வேகம் பெறும் என்று கூறப்பட்டது.
இணையத்தின் வேகம் மற்றும் அணுகல்தன்மை காரணமாக, மின்னஞ்சல், வீடியோ அழைப்பு, வழிசெலுத்தும் வரைபடங்கள், இணையத்தில் உலாவுதல், மொபைல் போன்களில் இசையைக் கேட்பது போன்ற வசதிகள் கிடைக்கத்தொடங்கின.

உலகை கைக்குள் அடக்கிய 4 ஜி
3 ஜி இணையத்தின் சகாப்தத்தில் கூட, நெட்வொர்க் பலவீனமாக உள்ள பகுதிகளில், இணையத்தைப் பயன்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது.
2010ல் 4 ஜி வருகைக்குப் பிறகு, இணையம் அனைவருக்கும் எளிதாகத் தொடங்கியது. அதிக வேகம், உயர் தரம் மற்றும் நல்ல குரல் அழைப்பு மற்றும் டேட்டா சேவைகள் பன்மடங்கு சிறப்பாக மாறின.
இதன் வேகம் 3ஜியை விட ஐந்து முதல் ஏழு மடங்கு அதிகம். இன்று நாம் பயன்படுத்தும் இணையம் பெரும்பாலும் 4ஜி.
இன்டர்நெட்டின் வேகத்தால் லைவ் வீடியோக்கள் பார்ப்பது, டாக்ஸி புக் செய்வது, உணவு ஆர்டர் செய்வது, வீடியோ கால் செய்வது போன்றவை அன்றாடமாகிவிட்டது.
இதன் காரணமாக, இணையம் பெருகிய முறையில் பிரபலமடைந்து, முன்பை விட மலிவானதாக இருப்பதால், பெரும்பாலான பொதுமக்களுக்கும் அணுகக்கூடியதாகவிட்டது.
5 ஜி வசதி தெரியும்?
4 ஜி சேவையில் 'லேடென்ஸி' என்னும் தாமதம் 50 மில்லி விநாடிகள் என்ற நிலையில், 5 ஜி ல் தாமதம் 1 மில்லி விநாடிகள் மட்டுமே. தாமதம் என்பது தரவு ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க எடுக்கும் நேரத்தைக் குறிக்கிறது.
5ஜி தொழில்நுட்பத்தின் உதவியுடன் சாதனங்களில் ஆற்றல் தேவை கண்டிப்பாக குறையும். இதனால் சாதனம் மற்றும் பேட்டரி ஆயுள் பன்மடங்கு அதிகரிக்கும்.
5 ஜி பதிவிறக்க வேகத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் தரும். அதாவது, அதிவேகம் மற்றும் குறைந்த தாமதம் ஆகியவற்றுடன் இணைய உலகம் வியக்கதக்க வேகத்தைப் பெறும்.
இனி வரும் காலங்களில், இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் ஸ்மார்ட் சிட்டிகள் கட்டப்படும். அதில், தானியங்கி கார்கள், ரோபோடிக் சர்ஜரி போன்றவை சர்வ சாதாரணமாகி விடும்.
தென் கொரியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், 5ஜி சேவை ஏற்கனவே தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் இந்தியாவும் இணையும்? என்பதை அக்டோபர் 12ம் தேதி வரை காத்திருந்து தான் ஐயத்துக்கான விடையை அறிய முடியும்.
ஹாய் யூத்ஸ்... என்ன ரெடியா...! 5 ஜி தான் இனி.... செல்போன் வாங்கினா...! 5 ஜி சப்போர்ட் பண்ணும் போனை வாங்குங்க...!


Click it and Unblock the Notifications












