சென்னை: மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ் சேர முதல் கட்ட கவுன்சிலிங்கில் தேர்வாகி கல்லூரியில் சில மாணவர்கள் சேராததால் இதுவரை 58 இடங்கள் காலியாகவுள்ளன. அதைப் போலவே 24 பிடிஎஸ் இடங்களும் காலியாக இருக்கின்றன.
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட அரசு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கவுன்சிலிங்கை தமிழ்நாடு மருத்துவக் கல்வி தேர்வுக் குழு நடத்தியது. இந்த கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது.
ஜூலை 2 வரை கெடு
முதல் கட்ட கவுன்சிலிங்கில் தேர்வான 2,939 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் கொடுக்கப்பட்டது. அவர்கள் கல்லூரியில் சேர ஜூலை 2-ம் தேதி கடைசி நாள் என கெடு வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்றுடன் இந்தக் கெடு முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து சில மாணவர்கள் சேராத காரணத்தால் 58 எம்பிபிஎஸ் இடங்களும், 24 எம்பிபிஎஸ் இடங்களும் காலியாக இருக்கின்றன.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர கலந்தாய்வில் தேர்வானவர்களில் 69 மாணவர்கள் உரிய காலக்கெடுவுக்குள் சேர்க்கைக் கடிதத்தைப் பெறவில்லை என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.
எண்ணிக்கை கூட வாய்ப்பு
காலக்கெடுவுக்குள் சேர்க்கைக் கடிதத்தைப் பெறாததால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 12 எம்.பி.பி.எஸ். காலியிடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 46 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்களும் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர சேர்க்கைக் கடிதம் பெற்ற 2,796 மாணவர்களில் (அரசு கல்லூரிகள்- 2,245 பேர்; சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள்- 551 பேர்), காலக்கெடு நாளான நேற்று மாலை 5 மணிக்குள் 2,738 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
சேர்க்கைக் கடிதத்தைப் பெற்ற பிறகும்கூட, உரிய அரசு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேராத மாணவர்கள் குறித்த விவரம் ஓரிரு நாளில் தெரியவரும் என்று உஷா சதாசிவம் தெரிவித்தார்.
எனவே தற்போதுள்ள 58 எம்.பி.பி.எஸ். காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்
பாரிமுனை பல் மருத்துவக் கல்லூரி
சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய அனைத்து 85 பி.டி.எஸ். இடங்களுக்கும் முதல் கட்டக் கலந்தாய்வில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எனினும் காலக்கெடுவுக்குள் 74 மாணவர்கள் மட்டுமே சேர்க்கைக் கடிதம் பெற்றனர்.
சேர்க்கைக் கடிதம் பெற்ற 74 மாணவர்களில், நேற்று வரை 61 மாணவர்கள் மட்டுமே பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர்.
எனவே அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 24 பி.டி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாம் கட்ட கவுன்சிலிங்
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்படும் எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், 24 அரசு பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 1,020 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப ஜூலை 22-ஆம் தேதியிலிருந்து இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும்.
இதற்கான ஏற்பாட்டை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications












