சென்னை: மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் 52 பேரை அந்தப் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை.
பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பணியாற்றி வந்த அந்த 52 பேருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இவர்கள் அனைவரும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் 75-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் இருந்தன. இதனால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் இருந்த 52 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதன்மூலம் கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், சங்ககிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும், திருநெல்வேலி, வேலூர், மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களும், தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
இந்த உத்தரவை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
ஆனால் இன்னும் 25 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், 16 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலான பணியிடங்கள் காலியாகவுள்ளன. அவற்றையும் நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கையை விடுத்துள்ளது.