சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு ஜூன் 19-ல் தொடங்குவதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 5,000 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு வருவதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் உஷா சதாசிவம் அறிவித்துள்ளார்.
தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்-ஆஃப் மதிப்பெண், ரேங்க் எண் அடிப்படையில் குறிப்பிட்ட தேதியில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும் உஷா சதாசிவம் கூறினார்.
ஜூன் 19 முதல் முதல் கட்டக் கலந்தாய்வு, சென்னை வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் நடைபெறவுள்ளது. ஜூன் 25 வரை முதல் கட்டக் கலந்தாய்வு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவனையில் நடைபெற்று வருகின்றன.
முதலில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு வரும் கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுப் பிரிவினர் உள்ளிட்ட பிற சமுதாயப் பிரிவினருக்கு ஜூன் 20 முதல் தொடர்ந்து வரும் 25-வரை ஒரு வார காலம் நடைபெறும்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 551 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றை நிரப்ப முதல் கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். கலந்தாய்வு அட்டவணை, தமிழக சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org, தமிழக அரசின் www.tn.gov.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது அதைப் பார்த்து மாணவர்கள் கலந்தாய்வு தேதியை அறிந்துகொண்டு அதற்கேற்ப கலந்துகொள்ளலாம் என்றார் உஷா சதாசிவம்.