பல்வேறு எம்.பி.ஏ. படிப்புகள், இரட்டை பட்டப் படிப்புகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதிகளாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை தமிழக உயர் கல்வித் துறை அண்மையில் பிறப்பித்திருக்கிறது.
புதிய புதிய படிப்புகள்
தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு கலை, அறிவியல், பொறியியல்-தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை என அனைத்துத் துறைகளிலும் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
குறைந்தபட்ச பாடங்கள்
அவ்வாறு அறிமுகம் செய்யப்படும் புதிய படிப்புகளில், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள அந்தந்தத் துறை சார்ந்த மூலப் படிப்புகளின் பாடத் திட்டத்தில் குறைந்தபட்சம் 70 சதவிகித பாடங்களைக் கொண்டவையாக இருந்தால் மட்டுமே, அந்தப் புதிய படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும். மாறாக 70 சதவிகிதத்திற்குக் குறைவான பாடங்களைக் கொண்டிருந்தால் அந்தப் புதிய படிப்பு குறிப்பிட்ட அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
யார் தயாரிப்பர்?
உயர்கல்வித் துறைச் செயலர், பேராசிரியர்கள், நிபுணர்கள் அடங்கிய பட்டப்படிப்பு இணைக் குழு ஒன்றை அமைத்து, பல்வேறு கட்ட ஆய்வு செய்து எந்தெந்தப் படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையானவை அல்லது இணையற்றவை என்ற பட்டியலை அவ்வப்போது அரசாணையாக வெளியிடுவது வழக்கம்.
டிஎன்பிஎஸ்சி
இந்த அரசாணையின் அடிப்படையில் தான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசுப் பணிகளுக்கானத் தேர்வை நடத்தும். அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற இந்த பட்டப் படிப்பு இணைக் குழுவின் 60-ஆவது கூட்டத்தில், பல்வேறு பல்கலைக் கழகங்கள் சார்பில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதிக்கு இணையற்றவை என (அரசாணை எண்.66) அறிவிக்கப்பட்டுள்ளன.
எம்பிஏ படிப்புகள் :
அவ்வாறு பட்டியலிட்டதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் எம்.பி.ஏ. சந்தை மேலாண்மை, எம்.பி.ஏ. சர்வதேச வணிகம், எம்.பி.ஏ. இணையம் மற்றும் வணிகம், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு, எம்.பி.ஏ. உலக மேலாண்மை, ஆன்-லைன் எம்.பி.ஏ., எம்.பி.ஏ. நிதி மேலாண்மை உள்ளிட்ட படிப்புகள் அரசு பொதுத் துறை நிறுவன பணிகளுக்கான எம்.பி.ஏ. கல்வித் தகுதிக்கு இணையானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டைப் பட்டப் படிப்புகள்:
அதுபோலவே, இந்தப் பல்கலைக் கழகம் சார்பில் வழங்கப்படும் பல்வேறு இரட்டை பட்டப் படிப்புகளும் அரசுப் பணிகளுக்குத் தகுதியானவை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பி.எஸ்சி. கணினி அறிவியல் - பி.எஸ்சி. கணிதம் இரட்டைப் பட்டப் படிப்பு அரசுப் பணிக்கான பி.எஸ்சி. கணினி அறிவியல் படிப்புக்கு இணையானது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளப்படாத படிப்புகள்
மேலும், இந்தப் பல்கலைக் கழகம் சார்பில் வழங்கப்படும் பி.பி.ஏ. இரட்டைப் பட்டப் படிப்பு , பி.ஏ. சமூகவியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. அரசியல் அறிவியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. வரலாறு இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. ஆங்கிலம் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. பொருளாதாரம் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.காம். இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. காட்சி தகவல் தொடர்பியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. புள்ளியியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. கணினி அறிவியல் இரட்டைப் பட்டப் படிப்பு ஆகியவை அந்தந்த மூலப் படிப்புகளுக்கு இணையானவை அல்ல எனவும், அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலையும் படிப்புகளும் :
பாரதியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. பயன்முறை (அப்ளைடு) நுண் உயிரியல் படிப்பு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. ஒருங்கிணைந்த உயிரியல், எம்.எஸ்சி. உயிரியல் படிப்புகள், காந்திகிராம் கிராம நிறுவனம் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. பயன்முறை உயிரியல், பாரதிதாசன் பல்கலை சார்பில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. உயிர் அறிவியல், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. விலங்கியல், எம்.எஸ்சி. கடல் வாழ் நுண் உயிரியல் ஆகிய படிப்புகள் அரசுப் பணிக்கான எம்.எஸ்சி. விலங்கியல் கல்வித் தகுதிக்கு இணையாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் பல படிப்புகள்
மேலும் பல்வேறு படிப்புகள் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல என தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில், அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என கல்வியாளர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.