சென்னை : பள்ளிக்குச் செல்லாத 400க்கும் மேற்பட்ட குழந்தைகளை கண்ணகி நகர் காவல் துறை தேடிப் பிடித்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பியது. இந்தியாவின் எதிர்காலம் மீட்டெடுக்கப்படடது.
சென்னையிலுள்ள கண்ணகி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளி செல்லாக்குழந்தைகள் மற்றும் பள்ளியில் இருந்து பாதியில் நின்ற குழந்தைகளைக் கண்டுபிடித்து அங்கு பணியாற்றும் காவலர்கள் பள்ளிக்கு அனுப்பினார்கள். இது வரவேற்கத் தக்கதாகும்.
இப்படி ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவல்துறையினர் செயல்பட்டால் கல்வியறிவு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள். நம் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
நாளைய இந்தியா
"இன்றைய இளைஞர்கள் நாளைய இந்தியா" என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது ஒவ்வொரு இந்தியர்களின் கடமையாகும். காவல் துறை மக்களின் நண்பர் என்பர் அதனை நிரூபிக்கும் வகையில் கண்ணகி நகர், அடையார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.
440 குழந்தைகள்
கண்ணகி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளது பெற்றோர்களை காவல் துறையினர் சந்தித்து கல்வியின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வைத்துள்ளார்கள். கடந்த 6 மாதமாக அவர்கள் எடுத்த முயற்சியினால் கிட்டத்தட்ட 440 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
மாணவர்களை நல்வழிப்படுத்திய காவல்துறை
"கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே மேல். ஏனென்றால், கல்லாமைதான் தீவினையின் மூலவேர்" என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இவ்வுலகத்தில் பிறந்தவர்கள் கல்வி கட்டாயம் கற்க வேண்டும். கல்வி கற்காமல் இருப்பதை விட பிறக்காமலேயே இருந்து விடலாம் என்று வள்ளுவர் கூறியுள்ளார். எல்லாத் தீமைகளுக்கும் கல்வியறிவு இல்லாததே காரணமாகும் என்பதால் மாணவர்களை நல்வழியில் நடத்தினார்கள் கண்ணகி நகர் காவல்துறையினர். அத்தோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்கள் ஒழுங்காக பள்ளிக்குச் செல்கின்றனரா எனவும் கண்காணித்து வருகின்றனர்.
சமுதாய சீர்திருத்தம்
"கல்வி என்பது எதிர்கால வாழ்க்கையை எதிர்கொள்ளத் தேவையான ஒன்றாகும்" குழந்தைகள் கல்வியறிவு பெற வேண்டும் என்ற சமுதாய நோக்கத்தோடு பணியாற்றிய காவல் துறையினரின் இந்த முயற்சி மிகவும் வரவேற்கத் தக்கதாகும். இதைப்போல் அனைத்து பகுதியிலும் காவலர்கள் செயல்பட்டால் கல்வியறிவில்லாதவர்களே இருக்க மாட்டார்கள். குழந்தைகள் சிறுவயதிலேயே வழி தவறி செல்வதற்கு படிப்பறிவு இல்லாததே ஒரு முக்கியக் காரணமாகும்.
குழந்தைகளை சரியான வழியில் நடத்திச் செல்ல வேண்டியது சமுதாயக் கடமையாகும். இன்றையக் குழந்தைகள் நாளைய இந்தியா.
அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் நாளைய இந்தியாவை வளமுள்ளதாக்குவோம்.