சென்னை: 431 மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு அட்மிஷன் கடிதத்தை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வழங்கியது.
தேர்வுக் குழு
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு கவுன்சிலிங்கை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு நடத்தியது. இதற்கான கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூலையில் தொடங்கியது.
2 கட்ட கவுன்சிலிங்
ஜூலை மாதத்தில் மட்டும் முதலாவது, இரண்டாவது கட்ட கவுன்சிலிங் நடைபெற்றது. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர்ந்தனர்.
3-வது கட்ட கவுன்சிலிங்
இந்த நிலையில் கடந்த மாதத்தில் 3-வது கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அதில் காலியான இடங்களுக்காக 3-வது கட்ட விரிவுபடுத்தப்பட்ட கவுன்சிலிங் அக்டோபர் 4, 5-ம் தேதிகளில் நடைபெற்றது.
சேர்க்கைக் கடிதம்
இந்த கவுன்சிலிங்கின்போது 431 மாணவர்களுக்கு அட்மிஷன் கடிதம் நேற்று இரவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேரவுள்ளனர்.
மொத்த இடங்கள்
மறு ஒதுக்கீடு, காலியிடங்கள் என அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 167 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 15 காலியிடங்கள், மறு ஒதுக்கீடு, காலியிடங்கள் என சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 189 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்த 10 பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மறு ஒதுக்கீடு, காலியிடங்கள் என 50 அரசு ஒதுக்கீட்டு
பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் இந்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
வழக்கு
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டுக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்களில் தாங்கள் விண்ணப்பித்துக் காத்திருப்பதால், கவுன்சிலிங்கில் அனுமதித்து அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர அனுமதிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 2 மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
உத்தரவு பிறப்பிக்கவேண்டும்....
இதுதொடர்பாக தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு உத்தரவை உச்ச நீதிமன்றம் அளிக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கு காரணமாக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். 3-ஆம் கட்ட விரிவுபடுத்தப்பட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்று தேர்வான 431 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாமல் இருந்தது.
தள்ளுபடி
இந்த நிலையில் தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மாணவர்கள் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடியானது.
மின்னஞ்சல்
இதையடுத்து, கவுன்சிலிங்கில் தேர்வான 431 மாணவர்களுக்கும் உடனடியாக சேர்க்கைக் கடிதம் வழங்குமாறு, உரிய கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் உஷா சதாசிவம் மின்னஞ்சலில் தகவல் அனுப்பினார்.
உடனடியாக கல்லூரியில் அனுமதி
இதைத் தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டு, நேற்று இரவே அவர்கள் கல்லூரியில் சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.