சென்னை: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைந்துள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ்(கேஐஎஸ்எஸ்) பல்கலைக்கழகத்தில் 41-வது தேசிய சமூகவியல் மாநாடு நேற்று தொடங்கியது.
மாநாட்டை சமூக ஆர்வலர் மேதா பட்கர் தொடங்கிவைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் கேஐஎஸ்எஸ் பல்கலை. வேந்தர் டாக்டர் அச்சுதா சமந்தா, இந்தியன் சோஷியாலாஜிக்கல் சொசைட்டியின் செயலர் ஆர். இந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் மேதா பட்கர் பேசியதாவது:
வளர்ச்சி என்று நாம் சொல்லி வருவது வளர்ச்சியே அல்ல. நாட்டிலுள்ள அனைவரும் பங்கேற்று செயல்படுவதே உண்மையான வளர்ச்சியாகும். அனைவருக்கும் இயற்கை வளங்களை சம அளவில் விநியோகம், அதை சரியான விகிதத்தை பயன்படுத்துதல் ஆகியவை உண்மையான வளர்ச்சியாக இருக்கும். வளர்ச்சியில் அனைவரும் நல்ல முடிவுகளைப் பெறவேண்டும்.
அனைவருக்கும் உணவு,இருப்பிடம், சுகாதார வசதி, வீடுகள் அனைத்தும் கிடைக்கவேண்டும். ஒரு சிலருக்கு மட்டுமே சில பொருள்களைக் கொடுப்பதால் வளர்ச்சி ஏற்பட்டு விடாது.
கேஐஎஸ்எஸ், கேஐஐடி பல்கலைக்கழகங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக செயல்படுகின்றன.
கேஐஐடி இன்ஸ்டிடியூட்டில் வரும் வருமானம் கேஐஎஸ்எஸ் பல்கலைக்கழகத்துக்கு திருப்பிவிடப்படுகிறது. இங்கு 25 ஆயிரம் பழங்குடியினக் குழந்தைகள் இலவசக் கல்வி பெறுகிறார்கள். இதற்காக டாக்டர் அச்சுதா சமந்தாவின் முயற்சி பாராட்டுக்குரியது என்றார் அவர்.