தமிழக பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் குறைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துவித கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகளைத் திறப்பதற்கான சூழ்நிலையே இல்லாமல் உள்ளது. இதனால், ஆன்லைன் வழியில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களின் மனச்சுமையைக் குறைக்கும் வகையிலும், தேர்வு நேரத்தில் எளிதில் படிக்கும் வகையிலும் பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இது குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா தெதாற்றினால் பள்ளி செயல்படும் நாட்கள் குறைவாக இருப்பதால், முக்கிய பாட பகுதிகளை மட்டும் மாணவ, மாணவிகள் படிக்கும் வகையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
அந்த குழுவின் அறிக்கையின் படி தற்போது பாடப்புத்தகத்திலிருந்து 40 சதவிகிதம் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தற்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் 90 சதவிகிதம் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என்றும், எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தை உருவாக்குவோம் என்றும் தெரிவித்தார்.