சென்னை: பி.இ. படிப்புகளுக்கான கவுன்சிலிங் வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. பொதுப் பிரிவினருக்கான இந்த கவுன்சிலிங்கில் இரண்டே நாளில் 4,820 பேருக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அரசு பொறியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களை நிரப்பும் பணியை அண்ணா
பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
1,92,075 இடங்கள்
பி.இ. படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. இந்தப் பிரிவின் கீழ் மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 75 பி.இ., பி.டெக். இடங்கள் உள்ளன.
முதல் நாளில் 1,256 பேருக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் கவுன்சிலிங் நேற்று நடைபெற்றது. இரண்டாம் நாளின்போது 4,621 பேர் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 3,564 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர், 1,772 பேர் கவுன்சிலிங்குக்கு வரவில்லை. மேலும் 42 பேர் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
இதன்மூலம் முதல் 2 நாட்களில் மட்டும் 4,820 பேர் சேர்க்கைக் கடிதத்தைப் பெற்றுள்ளனர்.
போட்டி போட்டு தேர்வு
முதல் நாளைக் காட்டிலும் இரண்டாம் நாளில் ஏராளமான மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பி.இ. படிப்புகளைத் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டினர். அதன்மூலம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே நாளில் சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
கிண்டி பொறியியல் கல்லூரியில் பயில ஆர்வம்
பி.இ. படிப்பைத் தேர்வு செய்தவர்களில் அதிகம் பேர் கிண்டி பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்தனர். கிண்டி பொறியியல் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள், அங்கு பயிற்சி அளிக்கும் விதம் ஆகியவற்றால் இந்தக் கல்லூரியில் பயில மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மெக்கானிக்கல் துறை கிட்டத்தட்ட நிரம்பியது
அதிலும் இங்குள்ள பி.இ. மெக்கானிக்கல் துறையைத் தேர்வு செய்வதில் பயங்கர போட்டி நிலவியது.கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இடங்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. எஸ்சிஏ பிரிவினருக்கான ஒரே ஒரு இடம் மட்டுமே இப்போது காலியாக உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக இங்கு பி.இ. சிவில் பிரிவில் 3 இடங்கள் மட்டும் உள்ளன.
இசிஇ பிரிவில் 17 இடங்களும், சிஎஸ்இ பிரிவில் 25 இடங்களும், கிண்டி பொறியியல் கல்லூரியில் உள்ளன.
தமிழுக்கு ஒரே ஒருவர்
இதுபோல் தமிழ் வழி பி.இ. மெக்கானிக்கல் படிப்பை ஒரு மாணவர் தேர்வு செய்திருக்கிறார். ஜூலை 28-ம் தேதி வரை கவுன்சிலிங்கு இங்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.