சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை 4¾ லட்சம் பேர் எழுதினர். 5 சதவீதம் பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
தகுதி தேர்வு தாள்-2 தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 2 நாட்களாக தேர்வு நடந்தது. பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்தவர்களுக்கு தாள்-1 தேர்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 2-வது நாளான நேற்று பி.எட். முடித்த பட்டதாரிகளுக்கு தாள்-2 தேர்வு நடந்தது. முதல் நாள் நடந்த ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்களுக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் 598 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை 95 சதவீதம் பேர் எழுதினர். 5 சதவீதம் பேர் கலந்து கொள்ளவில்லை.
அதுபோல நேற்று பி.எட். முடித்த பட்டதாரிகளுக்கு (தாள்-2) ஆசிரியர் தகுதி தேர்வு 1,263 மையங்களில் நடைபெற்றது. தேர்வு நேற்று காலை பகல் 10 மணி முதல் பகல் 1 மணிவரை நடந்தது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க 3 ஆயிரம் பேரும், தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 8 ஆயிரம் பேரும் ஈடுபட்டனர். தேர்வு எழுத வந்திருந்தவர்களில் சிலர் குழந்தைகளுடனும், ஒரு சிலர் கைக்குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.
அவர்கள் குழந்தைகளை தாய், கணவர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு தேர்வு அறையில் 20 பேர்கள் மட்டுமே இருந்தனர். தேர்வு ஹால் டிக்கெட், பேனா ஆகிய இரண்டும் தவிர செல்போன் உள்ளிட்ட அனைத்து வித பொருட்களையும் அதற்காக ஒதுக்கிய அறையில் ஒப்படைத்துவிட்டு தேர்வு எழுதினார்கள்.
தேர்வு நடந்த மையங்களையொட்டிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. சென்னையில் கலெக்டர் வெ.அன்புச்செல்வன் விருகம்பாக்கம் பாலயோக் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ள சில மையங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதை பார்வையிட்டார். அதுபோல சென்னை மாவட்டத்தில் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் ச.கண்ணப்பன் ஆசிரியர் தகுதி தேர்வை கண்காணித்தார்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் அவர்களுக்கு ஒதுக்கிய மாவட்டங்களுக்கு சென்று அவர்கள் தேர்வையும் விடைத்தாள்களை சென்னைக்கு அனுப்பும் பணியையும் கண்காணித்தனர்.
சென்னை மாவட்டத்தில் நேற்று 29,507 பேர் தேர்வு எழுதினார்கள். 1,728 பேர் வரவில்லை. 94.5 சதவீதம் பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு எளிதியவர்கள் தேர்வு எளிதாக இருந்தது. ஆனால் உளவியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்தன எனவும் தெரிவித்துள்ளனர்.