சென்னை: காலியாகவுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்காக தமிழகத்தில் நாளை விரிவுபடுத்தப்பட்ட 3-ம் கட்ட கவுன்சிலிங் தொடங்கவுள்ளது.
இந்த கவுன்சிலிங்கின்போது 67 எம்.பி.பி.எஸ்.இடங்கள், 8 அரசு பி.டி.எஸ். இடங்கள், 143 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் ஆகியவை நிரப்பப்பட உள்ளன.
ஓமந்தூரார் மருத்துவமனை
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் அக்டோபர் 4 முதல் 5-ம் தேதி வரை இந்த விரிவுபடுத்தப்பட்ட கவுன்சிலிங் நடைபெறும்.
10 ஆயிரம் பேருக்கு அழைப்பு
இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி சேர்க்கை தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலியிடங்கள்
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்கள், மூன்று கட்ட கவுன்சிலிங்குக்குப் பிறகும் மாணவர்கள் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் ஆகியவை இந்த விரிவுபடுத்தப்பட்ட 3-ஆம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்பட உள்ளன.
இணையதளத்தில் வெளியீடு
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 52 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள 15 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 8 பிடிஎஸ் காலியிடங்கள், மதுரை பெஸ்ட் பல் மருத்துவக் கல்லூரி சமர்ப்பித்துள்ள 33 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் உள்பட மொத்தம் 143 அரசு ஒதுக்கீட்டு காலியிடங்கள் உள்ளன.
விரிவுபடுத்தப்பட்ட கவுன்சிலிங்
இந்த காலியிடங்கள் அனைத்தும் விரிவுபடுத்தப்பட்ட 3-ஆம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாற்றம்
ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து பிற மருத்துவக் கல்லூரிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கான மறு ஒதுக்கீடும் இந்தக் கவுன்சிலிங் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கவுன்சிலிங் அட்டவணை
கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் அட்டவணை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.