சென்னை: பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வில் இதுவரை 32 ஆயிரம் பேர் சேர்க்கை கடிதங்களைப் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
பி.இ. பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி 9 நாள்கள் முடிவுற்றுள்ள நிலையில் 9,111 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளதாகத் தெரியவந்துளள்ளது.
தமிழகத்திலுள்ள அரசு என்ஜீனியரிங் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் பி.இ,, பி.டெக். படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இதற்காக கடந்த மாதம் 28-ம் தேதி கவுன்சிலிங் தொடங்கியது. முதல் 3 நாட்கள் சிறப்புப் பிரிவினர், விளையாட்டுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெற்றது. ஜூலை 1-ம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்க நேற்று வரை மொத்தம் 41,910 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 32,640 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
9,111 பேர் கவுன்சிலிங்கிலேயே பங்கேற்கவில்லை. 159 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
இப்போது 1 லட்சத்து 60 ஆயிரத்து 501 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன. இடங்களைத் தேர்வு செய்தவர்களில் 13,306 மாணவ, மாணவிகள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.