சென்னை : ஆசிரியர் தகுதித்தேர்வான டெட் தேர்வில் ஏழு லட்சத்துக்கும் மேலானவர்கள் தேர்வினை எதிர் கொள்ள உள்ளனர். அவர்கள் காப்பியடித்து எழுதுவதை தடுப்பதற்காக 3000 பறக்கும் படையினர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர்.
இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு இன்னும் இரண்டே நாளில் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஏப்ரல் 29 மற்றும் 30ந் தேதிகளில் நடைபெறவிருக்கும் தேர்வினை எழுத உள்ளார்கள். மேலும் அவர்களுக்காக தமிழகம் முழுவதும் 1.861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெட் தேர்வுக்கு மாவட்ட வாரியாக மண்டல வாரியாக இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் இடம் பெற்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1.861 தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் தேர்வர்கள் காப்பியடிப்பதை தடுப்பதற்காக 3000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் ஆகியோர் 3000 பேர் கொண்ட பறக்கும் படையில் இடம் பெறுவார்கள். மேலும் 1,900 நிலையான படைகளையும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அமைத்துள்ளது.
தேர்வில் முறைகேட்டுக்கு இடம் அளிக்கக்கூடாது. காப்பியடித்தல், ஆள் மாறாட்டம் போன்ற விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு நடக்கும் வரை, வினாத்தாள்களை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.