சென்னை: செவிலியர் பட்டயப் படிப்பு(நர்சிங் டிப்ளமோ) பயில மாணவ, மாணவியரிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது. இந்தப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே 3,500 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
23 அரசு கல்லூரிகள்
தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலிய பட்டயப் படிப்பு கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவிகள் சேர்க்கைக்கு நேற்று முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
2,100 இடங்கள்
இந்தக் கல்லூரிகளில் சுமார் 2,100 இடங்கள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், 9 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் விண்ணப்பங்களை நேரடியாக மாணவிகள் பெற்றுக் கொள்ளலாம்.
இணையதள முகவரி...
இதுதவிர, தமிழக அரசின் www.tn.gov.in, www.tnhealth.org ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்ளைப் பதிவிறக்கம் செய்து கொண்டு அதை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 250. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவிகள் ஜாதிச் சான்றிதழின் இரண்டு நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
மாணவிகள் ஆர்வம்
விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளான நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 3,566 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. ஏராளமான மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
ஆகஸ்ட் 4 கடைசி நாள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பக்க கடைசி தேதி ஆகஸ்ட் 4 ஆகும். அந்தத் தேதியில் மாலை 5 மணிக்குள் "செயலாளர், தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை' என்ற முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு செவிலியர் பட்டயப் படிப்பு தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.