தமிழக பள்ளிகளில் 3, 4, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 1, 6, 9, 11-ஆம் ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு 2, 7, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்குப் பாடத்திட்டம் மாற்றப்பட்டு அச்சுப் பணிகள் நிறைவடைந்து விட்டன.
இதனிடையே, 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
இப்பாட புத்தக தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மேலும் 4 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முழுமையாகத் தயாராகிவிட்டதாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வரை ஆசிரியர்கள் www.textbooksonline.tn.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.