சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான 2-ம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்படவுள்ளது. ஜூலை 22-ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சென்னையில் இந்த கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
5 ஆயிரம் மாணவர்களுக்கு அழைப்பு
இதற்காக சுமார் 5,000 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவுள்ளதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.
முதல் கட்டக் கவுன்சிலிங்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்ட கவுன்சிலிங் கடந்த ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. அப்போது 2,900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
காலியிடங்கள்...
இந்தக் கவுன்சிலிங்கின்போது சேர்வதற்காக கடிதம் பெற்ற மாணவர்கள் சிலர் கல்லூரிகளில் சேராததால் காலியிடங்கள் உருவாகியுள்ளன. அந்தக் காலியிடங்களை நிரப்பவே இந்த இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கவுள்ளது.
1,020 பிடிஎஸ் இடங்கள்
மேலும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 1,020 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களும் இரண்டாம் கட்டக் கவுன்சிலிங்கி்ல் நிரப்பப்படவுள்ளது.
அரசு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள்
மேலும் 9 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாகவுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில்தான் இந்த 9 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம், திருச்சி மருத்துவக் கல்லூரியில் 2 இடங்கள், தேனி மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம், கோவை மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம், சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம் என மொத்தம் 9 இடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலியிடங்களும் கவுன்சிலிங்கின்போது நிரப்பப்படவுளள்ளன.
சுயநிதி எம்பிபிஎஸ்
இதேபோல சுயநிதி அரசு எம்பிபிஎஸ் காலியிடங்களாக 108 இடங்கள் உள்ளன. சென்னை தாகூர், கோவை பி.எஸ்.ஜி., கோவை, கோவை கற்பகம், கன்னியாகுமரி ஸ்ரீ மூகாம்பிகை, மதுரை வேலம்மாள், பெரம்பலூர் சீனிவாசன், மதுராந்தகம் கற்பக விநாயகா, ஈரோடு ஐஆர்டி ஆகிய கல்லூரிகளில் 108 இடங்கள் காலியாகவுள்ளன.
இந்த இடங்களும் 2-ம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும்.
20 பிடிஎஸ் காலி
மேலும் சென்னை பாரிமுனையிலுள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 20 பிடிஎஸ் இடங்கள் காலியாகவுள்ளன. இந்த இடங்கள் 2-ம் கட்டக் கவுன்சிலிங்கின் நிரப்பப்படும் என்றார் உஷா சதாசிவம்.


Click it and Unblock the Notifications












