சென்னை:கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 277 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதனால் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதனால் சுமார் 11 லட்சம் மாணவர்கள் கூடுதலாக மெட்ரிக் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2011-12 கல்வியாண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தமிழகத்தில் 3,769 மெட்ரிக். பள்ளிகள் இருந்தன. இவற்றில் 25 லட்சத்து 55 ஆயிரத்து 625 மாணவர்கள் படித்து வந்தனர்.
இந்த எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்தப் பள்ளிகளில் 2014-15 ஆண்டு நிலவரப்படி, 36 லட்சத்து 56 ஆயிரத்து 317 பேர் படிக்கின்றனர். இதன்மூலம் 4 ஆண்டுகளில் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்துக்கும் அதிகமாகியுள்ளது.
4 ஆண்டுகளில் கூடுதலாக 277 மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதில், 2014-15 கல்வியாண்டில் மட்டும் 156 புதிய மெட்ரிக். பள்ளிகளுக்கும், 195 மெட்ரிக். பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளது.
ஆரம்ப நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு தாற்காலிக அங்கீகாரமும், அதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர் அங்கீகாரமும் மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
நடப்புக் கல்வியாண்டில் (2015-16) அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து டிசம்பரில்தான் தெரியவரும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.