சென்னை : மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதால் இந்தியா முழுவதும் 275 பொறியியல் கல்வி நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை மூட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் டி.சஹஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில்சார்பில், மின்னணு வழி கற்றல் சவால்களும், வாய்ப்புகளும்' என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை கோவையில் நடைபெற்றது.

கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இந்தப் பயிற்சி பட்டறை நேற்று நடைபெற்றது.
பழைய பாடத்திட்டம்
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் டி.சஹஸ்ரபுத்தே கோவையில் நடந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டார். அவர் கல்வி நிலையங்களில் 10 முதல் 15 ஆண்டுகளுக்குக் கூடபாடத்திட்டத்தை மாற்றாமல் வைத்துள்ளனர்.
புதிய பாடத்திட்டம்
தற்போதுள்ள நடைமுறைக்கு தகுந்தாற் போல பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவராததால் அந்த நிறுவனங்களில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டால்தான் மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்தப்படும்.
கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை
எனவே, பாடத்திட்டத்தை அவ்வப்போது மாற்ற வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். இந்தியாவில் 275 பொறியியல் கல்வி நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை மூட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளன. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.
ஆன்லைனில் பாடங்கள்
மின்னணு வழி கற்றல் முறைக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள ஸ்வயம் என்ற ஆன்லைன் கல்வி முறையில் தற்போது 280 பாடங்கள் உள்ளன. மேலும் 350 பாடங்கள் அதில் இணைக்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் பாடங்கள் ஆன்லைனில் இருக்கும்.
மாநில அரசுக்கு பரிந்துரை
பொறியியல் கல்விக்கான பாடங்கள் மட்டுமின்றி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பாடங்களையும் ஆன்லைனில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.சில கல்வி நிறுவனங்களில் உரிய அனுமதி இல்லாத பாடங்களை நடத்துவது குறித்த புகார்கள் வந்துள்ளன. அந்தப் பாடப் பிரிவுகளை நடத்த தடை விதிக்குமாறு, அந்தந்த மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக மையம்
சென்னை அல்லது கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாடங்களைக் கற்பிக்க பிரத்தியேக மையம் உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றார். இந்த பயிற்சி முகாமில் ஏஐசிடிஇ இயக்குநர் மன்பரீத் சிங்மன்னா, கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, பிரிட்டிஷ் கவுன்சில்தலைமை நிர்வாகி பருல் குப்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Click it and Unblock the Notifications












