சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு பயில 25 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையை தமிழக மருத்துவக் கல்வி சேர்க்கைக் குழு நடத்தி வருகிறது.
இதற்கான விண்ணப்ப விநியோகம் மே 26-ஆம் தேதி முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் நேரடி விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்ப விநியோகம் நடந்தது.
மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சாயின. மேலும் சுகாதாரத் துணையில் இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம் என்றும் மாணவர்களுக்குஅறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து திரளான மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கத் தொடங்கினர்.
இன்று (ஜூன் 7) கடைசி நாளாதலால் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் நேரடி விநியோகத்தின் மூலம் விண்ணப்பங்களைப் பெற்ற 21,213 பேரும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 3,912 பேரும், விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டுக்காக 343 பேரும் என மொத்தம் 25,468 விண்ணப்பங்களை தேர்வுக்குழு அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்துள்ளது.
தேர்வுக்குழு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜூன் 17-ஆம் தேதி கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் ஜூன் 20-ஆம் தேதி தொடங்க உள்ளது.