சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு பயில்வதற்காக விண்ணப்பங்களைப் பெறுவதற்கு மாணவச் செல்வங்கள் குவிந்துவிட்டனர்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய விண்ணப்பத்தைப் பெற ஜூன் 6 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 21 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் கடந்த மே 26-ஆம் தேதி முதல் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 நாள்களில் மொத்தம் 23,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றுவிட்டனர்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாலே போதும்.
அனைத்து இடங்களிலும் திங்கள்கிழமை (ஜூன் 6) மாலை 5 மணி வரை விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org மூலமும் ஜூன் 6-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர ஜூன் 7 கடைசி நாளாகும். இதுவரை 14,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பத்துடன் சான்றொப்பம் இட்ட பிளஸ் 2 தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணைத்து அனுப்பலாம்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் சென்னையில் வரும் 17-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி தொடங்கவுள்ளது.