கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்தவர் டினா டாபி. இந்த நிலையில் தற்போது இவரது இளைய சகோதரியான ரியா டாபி, வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட யுபிஎஸ்சி இறுதி வேட்பாளர் பட்டியலில் அகில இந்திய அளவில் 15-வது இடத்துடன் மதிப்புமிக்க சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுகுறித்து, டினா டாபி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தனது இளைய சகோதரியின் வெற்றியில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார். "என் இளைய சகோதரி ரியா டாபி யுபிஎஸ்சி 2020 தேர்வில் 15 வது இடத்தைப் பெற்றுள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அவர் அதில் பதிவிட்டுள்ளார்.
சகோதரிகள் இருவரும் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் படித்தவர்கள் ஆவர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வை மூன்று நிலைகளில் நடத்துகிறது. அதில், முதலாவதாக முதன்மைத் தேர்வு, அதைத் தொடர்ந்து மெயின் தேர்வு. இறுதியாக, முதல் இரண்டு தடைகளைத் தாண்டிய விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் அல்லது ஆளுமைத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
வெற்றிகரமான வேட்பாளர்கள் இந்திய நிர்வாக சேவை, இந்திய வெளிநாட்டு சேவை மற்றும் இந்திய போலீஸ் சேவை உட்பட அதிகாரத்துவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்.
டினா டாபி இப்போது ராஜஸ்தான் அரசாங்கத்தில் நிதி (வரி) இணைச் செயலாளராக உள்ளார்.
545 ஆண்கள் மற்றும் 216 பெண்கள் என மொத்தம் 761 விண்ணப்பதாரர்கள் இந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றனர். பீகாரின் சுபம் குமார் முதல் இடத்தையும், ஜாக்ரதி அவஸ்தி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இருவரும் பொறியியல் பட்டதாரிகள். மூன்றாவது இடத்தினை அங்கிதா ஜெயின் பிடித்துள்ளார். முதல் 25 வேட்பாளர்களில் 13 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் அடங்குவர்.