சென்னை: தமிழக அரசு சார்பில் லண்டன் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக 2 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் எஸ். கார்த்திகாவும், டி. கானசரஸ்வதியும் தேர்வு செய்யப்ப்டடுள்ளன மாணவிகள் ஆவர்.
இதில் கார்த்திகா எம்.எஸ்ஸி. கணினியியல் படித்து வருகிறார். அவர் லண்டனில் உள்ள வால்வர் காம்டன் பல்கலைக்கழகத்துக்குப் படிக்கச் செல்கிறார். இதேபோல வேதியியல் துறையில் படித்து வரும் மாணவி டி. கானசரஸ்வதி லண்டன் ஷெபீல்டு பல்கலைக்கழகத்துக்கு செல்லவுள்ளார்.
தமிழக அரசின் அயல்நாட்டு கல்வித் திட்டம் சார்பில், அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர், மாணவிகள் தங்களது ஒரு பருவத்தை வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயில தமிழக அரசே நிதியுதவி அளித்துவருகிறது. 2013-14ஆவது கல்வியாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 85 அரசுக் கல்லூரிகளில் பயில்வோரில் ஆண்டுதோறும் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்பப்பட்டு வருகின்றனர். இதற்காக ஒரு மாணவருக்கு ரூ. 15 லட்சம் வரை அரசு செலவு செய்கிறது. இத் திட்டம் தொடங்கிய ஆண்டிலிருந்து திருநெல்வேலி ராணி அண்ணா அரசுக் கல்லூரி மாணவிகள் தொடர்ந்து இடம்பிடித்து பெருமை தேடித்தந்துள்ளனர்.
இந்தத் திட்டம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே இந்தக் கல்லூரியைச் சேர்ந்த எம்.காம் படித்த மாணவி லண்டன் சென்றார்.
2ஆவது ஆண்டான கடந்தாண்டில் விலங்கியல் மாணவிகள் இருவர் லண்டன் ஷெபீல்டு காலம் பல்கலைக்கழகத்துக்குச் சென்றனர். தற்போது 3-வது ஆண்டாக 2 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.