சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழியாக கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் 11,992 பள்ளிகளில் ஆங்கில வழியாக சுமார் 2.60 லட்சம் மாணவர்கள் படிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழியாக கல்வி பயிலும் திட்டம் 3 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் 24,050 அரசுத் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் அரசுத் தொடக்கப் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்கவும் ஆங்கில வழி கல்விக்கு அனுமதி தரப்பட்டது. பின்பு ஆங்கில வழிக் கல்வியும் அறிமுகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்தது. கடந்த 3 ஆண்டுகளில் 8,934 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 2.1 லட்சம் மாணவர்கள் ஆங்கில வழிப் பிரிவுகளில் படித்து வருவதாக அரசு தெரிவிக்கிறது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 3,058 பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் 53,668 மாணவர்கள் படிப்பதாக பள்ளிக் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மொத்தம் 2.60 லட்சம் மாணவர்கள் ஆங்கில வழி மூலம் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications












