சென்னை: மத்திய அரசு திட்டமான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் (சிதம்பரம்) கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை வழங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் சில விளக்கங்களைக்
கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது.
ஆனால், இதுதொடர்பாக விளக்கம் வருவதற்குள் இந்த மாணவர்களுக்கான கட்டணமாக ரூ.97 கோடியை தனியார் பள்ளிகளுக்கு வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது என்றார் அவர்.
இதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதிலளித்துப் பேசியதாவது: தனியார் பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே ரூ.97 கோடியை தமிழக அரசு வழங்கியது.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் 2013-14, 2014-15, 2015-16 (30.07.2015 வரை) கல்வியாண்டுகளில் மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்தக் கல்வியாண்டில் மட்டுமே 80,450 பேர் ஏழை மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளனர் என்றார் அவர்.