சென்னை: கல்வித்துறையில் வியத்தகு சாதனை படைத்ததற்காக பிரிட்டன் ராணியின் விருதை 2 இந்தியர்கள் வென்றுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான கார்த்திக் சாஹ்னி, 28 வயதான நேஹா ஸ்வெயின் ஆகியோர் இந்த விருதை வென்றுள்ளனர். கல்வித்துறையில் பல சாதனைகளைப் புரிந்ததையடுத்து இந்த விருதுக்கு இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகளை பிரிட்டன் ராணி எலிசபெத் வழங்குவார்.
கார்த்திக் சாஹ்னி, பிறவியிலேயே பார்வையை இழந்தவர். அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் பாடுபட்டு வருகிறது. தாம் சார்ந்த பகுதியில் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்து வருகிறார் கார்த்திக். இதுகுறித்து கார்த்தி கூறியதாவது: பிரிட்டன் ராணி இளம் தலைவர்கள் விருது பெற்றதில் சந்தோஷப்படுகிறேன். கல்வியின் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவேன். சர்வதேச அளவில் கல்வி எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். 10-ம் வகுப்புக்குப் பிறகு பார்வை இல்லாத மாணவர்கள் அறிவியல் படிப்பைப் படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்காக ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளேன். ஸ்டெம்அக்செஸ் என்ற பெயரில் இந்த் திட்டத்தை உருவாக்கியுள்ளேன் என்றார் அவர்.
விருது பெற்ற நேஹா கூறியதாவது: ருபாரு என்ற பெயரில் அரசு சாரா அமைப்பை ஏற்படுத்தி கல்விச் சேவை செய்து வருகிறேன். சாதி, மத, இனம் பாராமல் அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டும். அதுவே என் விருப்பம். இதற்காக பயிலரங்குகள் பல நடத்தி வருகிறேன். பள்ளி மாணவர்களிடையே இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். ஹைதராபாதில் மட்டும் 2 ஆயிரம் இளைஞர்களிடையே இதுதொடர்பாக பேசியுள்ளேன். இந்த விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றார் அவர்.