காதி மற்றும் கிராமத் தொழிற் துறை மூலம் தமிழகத்தில் சுமார் 19 லட்சம் வேலை வாய்ப்பற்றோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக மக்களவைக் கூட்டத்தில் மத்திய சிறு, குறு நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
காதி தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், 2018-19-ஆம் ஆண்டின் போது காதி சீரமைப்பு, மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தால் 62 விற்பனை மையங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் கைவினைக் கலைஞர்கள் நேரடியாகப் பயன்பெற மாட்டார்கள். ஆனால், காதி, கிராமத் தொழில் தயாரிப்புகள் அதிகரிக்கப்பட்ட விற்பனையால் கைவினைஞர்கள் மறைமுகமாகப் பயன்பெறுவர்.
காதி கிராமத் தொழில்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதன் மூலம் காதி கிராமத் தொழில்கள் ஆணையம் ஒரு கோடியே 40 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு கூட்டு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதில், கூட்டு வேலை வாய்ப்பாகக் காதி கிராமத் தொழில்கள் துறையில் இருந்து தமிழகத்தில் சுமார் 19 லட்சம் பேருக்கும், பாண்டிச்சேரியில் 10 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.