நாமக்கல் : தமிழகம் முழுவதுவம் ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற 29 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கவிருக்கிறது. இதற்கான அனைத்துத்துறை அலுவலர்களுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைச் கூட்டத்திற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 848 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை எழுத உள்ளனர். முதல் தாள் தேர்வு ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 10 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
16 ஆயிரத்து 29 பேர் இரண்டாம் தாள் தேர்வை எழுத உள்ளனர். இரண்டாம் தாள் தேர்வு ஏப்ரல் 30ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக 41 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேர்வுமையங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 877 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுத உள்ளார்கள். இவர்களுக்காக 51 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
215 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக மொத்தம் 215 பேர் நாமக்கல் மாவட்டத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், முதுகலை ஆசிரியர்கள் துறை அலுவலர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்கள் துறை அலுவலர்களாகவும், வழித்தட அலுவலராகவும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அத்துமீறினால் நடவடிக்கை
நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் விடைத்தாள் சேகரிப்பு மையமும் அமைக்கப்பட்டு உள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் மையத்தில் அனுமதியின்றி எவரையும் உள்ளே நுழைய விடக்கூடாது. அத்துமீறி நுழைந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தடை
தேர்வு எழுதுபவர்கள் காப்பி அடிப்பதற்காக எந்த பேப்பரையும் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக் கூடாது. செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள் எதையும் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக் கூடாது. தேர்வு அறையில் கண்காணிப்பாளர் மற்றும் சக தேர்வர்கள் உடன் விதிகளுக்கு மாறாக நடந்து கொள்பவர்கள் மீத உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது காவல்துறை மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு 3 ஆண்டுகள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












