சென்னை, மார்ச் 12: உயர் கல்வி கற்போருக்காக 18 தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களை(National Educational Institutions) தொடங்க மத்திய மனித வள மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.
உயர் கல்வியை மேம்படுத்தவும், உயர் கல்விக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் வகையில் மாநில அளவில் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களை தொடங்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி பீகார், ஒடிசா, மகாராஷ்ட்டிரா, நாக்பூர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஆந்திரா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இந்திய மேலாண்மை மையங்கள் நிறுவப்பட உள்ளன.
ஆந்திர மாநிலத்தில் திருப்பதியில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரள மாநிலத்தில் பாலக்கோடு, சத்தீஷ்கர், கோவா, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு ஆகிய இடங்களில் புதியதாக ஐஐடிகள் தொடங்கப்படுகிறது.
ஆந்திராவில் தேசிய தொழில் நுட்ப மையம்(என்ஐடி) தொடங்கப்படுகிறது. ஆந்திராவில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) அமைகிறது. தவிரவும் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் மலைவாழ் மக்களுக்கான பல்கலையும்( Tribal University) அமைகிறது. மத்திய பிரதேசத்தில் கலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக ஜெய்பிரகாஷ் நாராயணன் பெயரில் சீர்மிகு கல்வி மையம்(Jai Prakash Narayan Centre for Excellence in Humanities) அமைகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று வெளியிட்டார். மேலும், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் தேவைப்படும் அத்தியாவசிய மாற்றங்களை கொண்டு வருவதற்காக உளவியல் அம்சங்களுடன் கூடிய வரைவுப் பாடத்திட்டத்தை உருவாக்க சீர்மிகு மையங்கள் (Centres of Excellence for curriculum and Pedagogy) 50 இடங்களில் அமைக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.