சென்னை: துணை மருத்துவப் படிப்புகளில்(பாரா மெடிக்கல் கோர்ஸ்ட்) சேர்வதற்காக மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தப் படிப்புகளில் சேர்வதற்காக மாணவர்கள் இதுவரை 18 ஆயிரம் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
செவிலியர் படிப்பு
பி.எஸ்சி. செவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் 4 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
மொத்தம் 7,578 இடங்கள்
இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 480 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 7,098 என மொத்தம் 7,578 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளில் சேர்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பும் முறை உள்ளது.
அதிக ஆர்வம்
இந்தப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். மாணவ, மாணவிகளுடன் அவர்களுடைய பெற்றோரும் வந்து தங்கள் குழந்தைகளுக்காக விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர்.
நீண்ட வரிசை
சில கல்லூரிகளில் விண்ணப்பங்களை விநியோகிக்கும் கவுன்ட்டர் குறைந்த அளவிலேயே இருப்பதால் அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இந்தப் படிப்புகளில் சேர்வதற்காக நேற்று வரை மொத்தம் 18, 200 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஜூலை 17-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்ப ஜூலை 18 கடைசி
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 18-ஆம் தேதிக்குள் "செயலாளர், மருத்துவக் கல்வி தேர்வுக்குழு, அரசு மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை-10' என்ற முகவரிக்கு வந்துசேர வேண்டும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications












