சென்னை: தமிழ்நாடு திறந்தநிலையில் பயின்ற 15,091 பேருக்கு கவர்னர் கே. ரோசய்யா பட்டம் வழங்கிப் பாராட்டினார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது பட்டமளிப்பு விழா தமிழக கவர்னர் கே. ரோசய்யா தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த 138 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அவர்களுடன் மொத்தம் 15,091 பேர் பட்டம் பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் கவர்னர் கே. ரோசய்யா பட்டம் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் பேசியது:
நாடு முழுவதும் 240 தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. 14 மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பட்டங்களைப் பெறுகின்றனர்.
நாட்டின் மொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதாசாரத்தில் 24 சதவீதம் இந்த திறந்தநிலை கல்வி நிறுவனங்கள் மூலம் நிகழ்கின்றன.ஆனால், இவ்வாறு வழங்கப்படும் கல்வி தரமாக உள்ளதா என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. தொலைநிலைப் பட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டவையா, மதிப்பு உள்ளவையா என்ற கேள்வி மாணவர்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்தால் நமக்கு வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் மாணவர்களிடையே எழுகிறது.
இந்தச் சந்தேகங்களைப் போக்கும் வகையில், கல்வித் தரத்தை திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மேம்படுத்த வேண்டும். முறையான கல்வி நிறுவனங்களிலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. தரம், வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் 50 சதவீதப் பொறியியல் கல்லூரிகள் இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பொறியியல் மாணவரைவிட, சாதாரண மெக்கானிக், திறன் மிக்கவராகக் காணப்படுகிறார்.
இந்த நிலையை மாற்ற, மத்திய அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட "பட்டப் படிப்பு தர நிர்ணயம் திட்டம்' விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
இதுபோல் தொலைநிலைக் கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கான இந்திய தொலைநிலை கல்விக் கவுன்சில் மசோதாவும் தயார் நிலையில் உள்ளது. இதன் மூலம் அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இந்திய தொலைநிலை கல்விக் கவுன்சில் ஆரம்பிக்கப்பட்டு விடும்.
மேலும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மிகவும் எதிர்பார்த்திருக்கும் 12பி தகுதி விரைவில் வழங்கப்பட்டுவிடும் என்றார் அவர்.
முன்னதாக, விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் பல்கலைக்கழக ஆண்டறிக்கையை வாசித்தார்.


Click it and Unblock the Notifications












