சென்னை: 10-வது படித்துக்கொண்டே வேலை பார்த்து வருகிறார் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 15 வயது மாணவர், முனகபாக கணேஷ்.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் இவரது தந்தை எம். ரமணா. இவர் சலவைத் தொழில் செய்து வந்தார். ஆனால் அதில் போதிய வருமானம் கிடைக்காததால் விசாகப்பட்டினத்தில் வாட்ச்மேனாக வேலை செய்துவருகிறார். ஆனால் மாத ஊதியம் ரூ.4 ஆயிரம். கணேஷின் சிறிய வயதிலேயே அவரது தாயார் ரமணம்மா இறந்துவிட்டார்.
கணேஷுக்கோ படிக்க ஆர்வம். ஆனால் போதிய வருமானமில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாதபோது எப்படி தந்தையிடம் படிக்க காசு கேட்பது என்று கணேஷ் விழித்தார். இந்த நிலையில்தான் தனது நண்பர்கள் காட்டிய வழியில் பள்ளியிலிருந்து வந்ததும் வேலை செய்ய ஆரம்பித்தார். மாலை நேரங்கள், இரவு நேரங்களில் பெரிய, சிறிய கார்களைக் கழுவி, துடைப்பதுதான் அந்த விலை. இதன்மூலம் அவருக்கு தினந்தோறும் ரூ.200 முதல் ரூ.300 வரை கிடைக்கிறது.
இதன்மூலம் அவர் மாதம் ரூ.4,500 சம்பாதித்து வருகிறார்.
காலை 5.30 மணிக்கே எழுந்துவிடும் கணேஷ் கார்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இப்போது 10-வது படிப்பதற்கான கட்டணத்தையும் அவர் செலுத்திவிட்டார். மற்ற பணத்தை தனது உயர்கல்விக்கு சேமித்து வருகிறார். வீட்டுச் செலவுக்காக தந்தைக்குத் தேவைப்படும் பணத்தையும் அவர் அளித்து வருகிறார்.
அவர் கூறியதாவது: இப்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். எப்படியும் சிறப்பாக படித்து ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதுதான் எனது லட்சியம். அதற்காகத்தான் இந்தப் பணத்தை சேமித்து வருகிறேன். ஐஐடி-யில் சேர்ந்து பொறியியல் நிபுணணாக மாறுவதுதான் எனது லட்சியம். எனது அண்ணன் 9-ம் வகுப்பு படிக்கும்போது வறுமையால் பாதியில் நின்றுவிட்டார்.
படிப்பின் அத்தியாவசியத்தை அவர்தான் போதித்தார். அதனால் யாருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகாமல் நான் வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறேன். இதில் என்ன அவமானம் வந்துவிட்டது.
என்னைப் போன்ற மாணவர்களுக்கு படிப்பைத் தவிர வேறு என்ன வேண்டும். இன்னும் சிறிது காலம் கழித்துப் பாருங்கள். நான் ஐஐடி-யில் சேர்ந்து படித்துக் கொண்டிருப்பேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் இந்த மாணவர்.