சென்னை: மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், மாநிலங்களவையில் நேற்று அளித்த எழுத்துபூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் பல்வேறு துறைகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்கள் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஏராளமான இடங்கள் காலியாகவுள்ளன.
இதுவரை சுமார் 14,267 இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவற்றில், சில பணியிடங்கள் சில ஆண்டுகளாகவே காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களில் 2,990 இடங்கள் பிரிவு ஏ அல்லது அதற்கு இணையான பதவிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத் திறனாளிகளுக்கான இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இந்தப் பணியிடங்களை நிரப்பும் விதத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு இயக்கத்தைத் தொடக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மத்திய அரசு கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார் ஜிதேந்திர சிங்.


Click it and Unblock the Notifications












