கொரோனா தொற்று நாட்டின் பல்வேறு வழக்கங்களையும் மாற்றி அமைத்துவிட்டது என்றால் மிகையாகாது. அந்த வகையில் மிகவும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது கல்வி சார்ந்த துறைகளே.

கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கான தேர்வுகளில் பல்வேறு மாற்றங்கள், பாடத்திட்ட மாற்றங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரையில் எந்த மாதிரியான விளைவுகள் பள்ளி அளவில் நடந்துள்ளது என பார்க்கலாம் வாங்க.
11, 12ம் வகுப்பு மாணவர்கள்
கொரானா எதிரொலியின் காரணமாக அரசு, தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டாரும் அடுத்துள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் நீடித்தன.
மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்
இதனிடையே, கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தின் மத்தியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது, மாணவர்கள் விருப்பத்தின் படி மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் எனவும், மாணவர்களின் வருகை பதிவைக் கணக்கிடத் தேவை இல்லை எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிகரித்த கொரோனா
இந்த நிலையில், மீண்டும் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இந்நோய் பெரிய அளவில் பரவியதைத் தொடர்ந்து பிப்ரவரி துவக்கத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.
பொதுத் தேர்வு
பள்ளிகள் மூடப்பட்டாலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், கொரோனா தொற்றின் தாக்கம் எந்த அளவுக்கு விரைவாகக் குறைகிறதோ அதற்கேற்ப விரைவாக பொதுத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களது உடல்நலனும் உயிரும் முக்கியம் என்று கூறியிருந்தார்.
தமிழக முதலமைச்சர் ஆலோசனை
இருப்பினும், இதுபோன்ற பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதில் சிக்கல் இருந்ததால் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.
கட்டாயம் தேர்வுகள் நடைபெறும்
கடந்த ஆண்டைப் பொறுத்தவரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடித்த பிறகுதான் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா பாதிப்பின் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்தபிறகு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக அறிவித்திருந்தார்.
தேர்வுகள் ரத்து செய்யப்படாது!
கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிப்பு குறைந்தபிறகு 12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கட்டாயம் தேர்வு நடத்தப்படும். 12-ம் வகுப்பு தேர்வு தள்ளிப்போகுமே தவிர ரத்து செய்யப்படாது என்று தெரிவித்தார்.
10, 11ம் வகுப்பு மதிப்பெண் வெளியீடு
ஆனால், கொரோனா தொற்றின் காரணமாக பொதுத் தேர்வு நடத்த முடியாத சூழல் நீடித்த நிலையில் தசம மதிப்பெண் படி மதிப்பெண்களை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனிடையே, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. 12-ம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்ட நிலையில், 12-ம் வகுப்பிற்கான முழு மதிப்பெண்களை கீழ்க்கண்ட வகையில் தமிழக அரசிற்கு வல்லுநர் குழு பரிந்துரைத்திருந்தது.
பரிந்துரைக்கப்பட்ட மதிப்பெண்
மாணவர், 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 50 சதவிகிதமாக கணக்கிடப்படும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 20 சதவிகிதமாக கணக்கிடப்படும். 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 30 சதவிகிதமாக கணக்கிடப்படும்.
செய்முறைத் தேர்வு மதிப்பெண்
மேலும், 12-ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதில், செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
மதிப்பெண் பட்டியல் வெளியீடு
அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடந்த ஜூலை 19ம் தேதியன்று வெளியிட்டார். மேலும், மாணவர்கள் அளித்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண் விவரங்கள் அனுப்பப்பட்டது.
மீண்டும் தேர்வு எழுதலாம்
அரசு அளித்துள்ள மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் மறுதேர்வு எழுதலாம் என்றும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அதற்கான தேர்வு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு
இந்த நிலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியின் மூலம் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
கடந்த ஆறு மாதங்கள்
இவ்வாறு தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் குறித்த பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. தொடர்ந்து, எவ்வித இடர்பாடுகளும் இன்றி தற்போது மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா எனும் தொற்று நாட்டின் செயல்பாடுகளை இந்த அளவிற்கு மாற்றி அமைக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.


Click it and Unblock the Notifications












