சென்னை: பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் மார்ச் 5ம்தேதி தொடங்கி 31ம் தேதியுடன் முடிகின்றன. எஸ்.எஸ்.எல்.சி வகுப்பு தேர்வுகள் மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகின்றன.
பிளஸ் 2 தேர்வில் புதுச்சேரி மாநிலம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் உள்ள 6256 பள்ளிகளில்(பிளஸ் 2), 11827 பள்ளிகள்(எஸ்எஸ்எல்சி) படிக்கும் மாணவ மாணவியர் தேர்வு எழுதுவார்கள்.
பிளஸ் 2 தேர்வில் இரு மாநிலங்களில் இருந்தும் 8,43,064 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் இரு மாநிலங்களை சேர்ந்த 10,72,691 மாணவ மாணவியரும் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் 3,90,753 மாணவர்கள், 4,52,311 மாணவியர் எழுதுகின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவியரே அதிகம்.
எஸ்.எஸ்.எல். தேர்வில் 5,40,505 மாணவர்கள், 5,32,,186 மாணவியரும் எழுதுகின்றனர். இந்த ஆண்டு மாணவர்கள் அதிகம் எழுதுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு நடக்கும் போதெல்லாம், தமிழ் வழியில் (மீடியம்) படிக்கும் மாணவர்களுக்கு அரசு சலுகையாக தேர்வுக் கட்டணம் பெறப்படுவதில்லை. அதன்படி, இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பில் பள்ளிகள் மூலம் 5,56,498 மாணவ மாணவியரும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் பள்ளிகள் மூலம் 7,30,590 மாணவ மாணவியரும் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுத உள்ளதால் அவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரில் டிஸ்லெக்சியா பிரச்னை உள்ளவர்கள் முன்கூட்டியே தேர்வுத்துறைக்கு விண்ணப்பித்தால், அந்த மாணவர்கள் தேர்வு எழுதும் போது அவர்கள் சொல்வதை கேட்டு விடைத்தாளில் எழுத வசதியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். மாற்றுத் திறனாளிகள் இருந்தால் அந்த வகை மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தேர்வு மையங்களில் ரேம்ப் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.