சென்னை: தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் இந்த படிப்புக்காக 1,119 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில உள்ள இடங்களுக்கு தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு, மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது.
இந்த கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திலுள்ள மையத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல இந்த கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற 3 நாள் கவுன்சிலிங்கில் மட்டும் 1,119 பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வுக்கு மொத்தம் 588 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வில் 580 மாணவர்கள் பங்கேற்றனர். 8 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இதில் 546 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர 29 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து 25-ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும்.
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இதுவரை சேர்க்கைக் கடிதங்களை தேர்வுக் குழு வழங்கவில்லை.