மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதாகக் கூறி 11 பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை வரும் கல்வியாண்டில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகள் பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்தாண்டு 440 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் வளர்ச்சியால் முந்தைய ஆண்டுகளைவிட 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை சற்று முன்னேற்றம் கண்டிருந்தது. எனினும், சில கல்லூரிகளில் சேர்க்கை ஒற்றை இலக்கத்தில்தான் இருந்தது வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதுகுறித்து பல்கலை. அதிகாரிகள் வட்டாரங்கள் கூறும்போது, ''கடந்த 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் 2024-25-ம் கல்வியாண்டில் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படாது.
எனவே, அந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது.
மேலும், 2023-24-ம் கல்வியாண்டில் 25 சதவீதத்துக்கும் குறைவான சேர்க்கை கொண்ட 67 கல்லூரிகளுக்கு வரும் கல்வியாண்டில் இணைப்பு அங்கீகாரம் நிபந்தனையுடன் அளிக்கப்படும். இதை பின்பற்றாத கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளது'' என்று தெரிவித்தன.


Click it and Unblock the Notifications












