சென்னை : 10ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு சமூக அறிவியல் தேர்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் திட்டக்குழு சம்பந்தப்பட்ட கேள்வி தவறாக கேட்கப்பட்டிருந்தது அதற்கு உரிய மார்க் வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரி கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 10லட்சத்து 38 ஆயிரம் மாணவ மாணவியர்கள் சமூக அறிவியல் தேர்வினை எழுதினார்கள். பத்தாம் வகுப்பில் அனைத்து தேர்வுகளும் எளிதாக அமைந்திருந்ததாக மாணவ மாணவியர்கள் கூறினர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடைசித் தேர்வான சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. அதில் 13வது கேள்வியும் பொருத்துக பகுதியில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் மாணவர்களை குழப்பத்திற்குள்ளாக்கியது.
மாணவர்களின் எதிர்ப்பார்ப்பு
கடைசித் தேர்வு சமூக அறிவியல் தேர்வு என்பதால் கேள்விகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே அதிகமாக இருந்தது. கடைசித் தேர்வும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
சென்டம் வாய்ப்பு அதிகம்
பல கேள்விகள் முந்தைய வினாத்தாள்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அதிகம் மாணவர்கள் சென்டம் எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் குழப்பம்
சில மாணவர்களுக்கு ஒரு மார்க் கேள்வியில் பொருத்துக பகுதியில் கேட்கப்பட்ட கேள்வியால் குழப்பம் ஏற்பட்டது. பொருத்துக பகுதியில் அதிக மழை பெய்யும் இடம் எது எனக் கேட்கப்பட்டிருந்தது.
ஷில்லாங்
புத்தகத்தில் மாணவர்கள் மவ்சின்ராம் என்று படித்திருக்கிறார்கள். ஆனால் வினாத்தாளில் ஷில்லாங் என கொடுக்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். மவ்சின்ராம் மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்திற்கு அருகில் உள்ளதால் வினாத்தாளில் ஷில்லாங் என கொடுக்கப்பட்டிருந்தது.
திட்டக்குழு
இந்தியாவில் ஜவஹர்லால் நேருவால் 1950ம் வருடம் திட்டக் குழு அமைக்கப்பட்டது. 2014ம் ஆண்டு திட்டக்குழு கலைக்கப்பட்டது. நிதி ஆயோக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
பாடத்திட்டம்
மாணவர்களின் பாடத்திட்டதின் படி திட்டக்குழுவின் தலைவர் யார் என்ற கேள்வி சரியானதுதான். 2014ம் ஆண்டிற்கு பிறகு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் ஏதும் கொண்டுவரப்படவில்லை. இந்தக் கேள்வியில் சில மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பாடத்திட்டத்தில் உள்ள பதிலையே எழுதியுள்ளனர். தவறான கேள்விக்கு உரிய மார்க் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மகிழ்ச்சி
தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்த மாணவ மாணவியர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்றோடு (28.03.2017) தமிழகத்தில் முடிவடைந்து விட்டது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியாகவும் ரிலாக்சாகவும் உள்ளனர்.